கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் - மூவர் சம்பவ இடத்தில் பலி
இருவேறு இடங்களில் கத்திகுத்து தாக்குதல்
கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள இஸ்லிங்டன் மற்றும் பெர்காமொட் ஆகிய வீதிகளுக்கு இடையிலும் மற்றும் ரொறன்ரோவின் ஜேன் வீதி மற்றும் டிரிப்வுட் வீதிக்கு அருகாமையிலும் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிகரிக்கும் தாக்குதல்கள்
முதலாவது தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது சம்பவத்தில் இரண்டு பேர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்மைய நாட்களாக ரொறன்ரோவில் இவ்வாறான கத்தி குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 13 நாட்களுக்கு முன்னரும் கனடாவில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.