அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு நேர்ந்த பெருந்துயரம்!
கிளிநொச்சி - மருதநகரைச் சேர்ந்த அரசியல் கைதி ஆனந்தசுதாகரது மனைவியின் தாயார், திருமதி தேவதாஸ் கமலா நேற்று (19.11.2025) திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டு காலங்களாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக தென்னிலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.
கணவரது ஆயுள் தண்டனைத் தீர்ப்பையும் அவரது நீண்ட பிரிவையும் தாங்கவியலாது நோயுற்ற அவரது துணைவியார் கடந்த 2018 ஆம் ஆண்டு இயற்கை மரணம் எய்தினார்.
குரலற்றவர்களின் குரல்
அவர்களது இரண்டு பிள்ளைகளையும் பேத்தியாரான திருமதி கமலா, தனது இயலாமை முதுமை போன்றவற்றிற்கு மத்தியிலும் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (19.11.2025) அந்தத் தாயாரும் உயிர் நீத்துள்ளார்.
சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால், ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற அந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 'அரசியற் கைதி ஆனந்தசுதாகர்' விடுதலைபெற்று வீடு திரும்ப வேண்டும் என 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |