அர்ச்சுனாவின் துப்பாக்கி நீதிமன்ற காவலில்! விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கைதுப்பாக்கியை சான்றுப்பொருளாக பெற்றுள்ள நீதிமன்றம் அதற்கான அனுமதியை இடைநிறுத்துவது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழில் காணி வழக்கு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையே இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் இன்று(29.04.2026) முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மணிவண்ணன் இதனை கூறியுள்ளார்
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
சட்டத்தரணி மணிவண்ணன்
''இன்று இடம்பெற்ற குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் முன்னிலையாகியிருந்தோன்.

இதன்போது மன்றிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். முதலாவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிணை வழங்கி உத்தரவிடுவதாகும். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கோரிக்கையை பரிசீலனை செய்து பிணைக்கான அனுமதியை வழங்கியிருந்தது.
இரண்டாவதாக அர்ச்சுனா இராமநாதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கச்சொல்லி கோரியிருந்தேன்.
அதனடிப்படையில் இளவாலை காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக மன்றிற்கு தெரிவித்ததை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
குறிப்பாக இந்த வழங்கில் பின்வரும் விடயங்களை விளக்கியிருந்தேன்.
ஒருவருக்கு துப்பாக்கியை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்குவதானது, எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாதவராக இருக்க வேண்டும்.
மேலும் குற்றவழக்குகள் இருக்கும் நபருக்கு துப்பாக்கியை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்க முடியாது.
அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்குகள்
இதனடிப்படையில் அர்ச்சுனாவுக்கு எதிராக அதிக குற்ற வழக்குகள் இருப்பதால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருக்க கூடாது.

இலங்கையில் உள்ள எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் தான் வைத்துள்ள துப்பாக்கியை கொண்டு பொதுமக்களை மிரட்டுகின்ற செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை.
ஆனால் இவர் ஒரு புதுவிதமாக தனக்கு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி சமூகத்தை மிரட்டுவதாகவும், இதன் காரணத்தால் அதனை இரத்து செய்யக்கோரி மன்றிடம் சமர்ப்பிப்புக்களை மேற்கொண்டேன்.
இதனடிப்படையில் அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி குறித்த விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது அது நீதிமன்ற சான்றுபொருளாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அனுமதியை முழுமையாக இரத்து செய்வது தொடர்பில் பரிசீலீக்க காவல்துறைக்கு மேலதிக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றால் உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 19.08.2026 அன்று தவணையிடப்பட்டுள்ளது.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |