குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு : சபையில் கேள்வியெழுப்பிய சஜித்
அஸ்வெசும வேலைத்திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து பயனளிக்கும் ஓர் வேலைத்திட்டமாக முன்னெடுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (20) நடைபெற்ற நிலையியற் கட்டளை 27/2 இன் கீழான வினாக்களின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்நாட்டிலுள்ள வறிய குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் முன்னைய அரசாங்கத்தால் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சலுகைகளைப் பெறத் தகுதியானவர்கள்
இதனால் பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஓர் முயற்சியாக இருந்தபோதிலும், வேலைத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக உண்மையிலேயே சலுகைகளைப் பெறத் தகுதியானவர்கள் சலுகைகளைப் பெறவில்லை என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்த குறைபாடுகளை முடியுமான அளவில் தவிர்த்துக் கொள்வதற்கு, சலுகைகள் வழங்கும் வழிமுறை, அவர்களின் தகுதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளை தொடர்ச்சியாக மதிப்பிடும் திட்டமொன்றை முன்னெடுப்பது மிக முக்கியமான விடயமாகும்.
எனவே, பின்வரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன். பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலக வங்கி சமர்ப்பித்த அறிக்கை
01. அஸ்வெசும வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதன் நோக்கங்கள் யாது?
02. அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் இதுவரை அடையப்பட்டுள்ளனவா? ஆமெனின், அடையப்பட்டுள்ள இலக்குகள் யாவை?
03. இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வருடாந்தம் வழங்கப்பட்ட சலுகை பெறுநர்களின் எண்ணிக்கையை கட்டம் கட்டமாக தனித்தனியாக சமர்ப்பிக்க முடியுமா? இதற்காக வருடாந்தம் செலவிடப்படும் மொத்தத் தொகை எவ்வளவு?
04. அஸ்வெசும சலுகை பயனாளிகளை வகைப்படுத்த பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் யாது?
05. அவ்வாறு பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்பற்றப்படும் வழிமுறை விஞ்ஞான ரீதியாகப் இலங்கைக்குப் பொருத்தமான வழிமுறையா? இந்த வழிமுறை தொடர்பில் அரசாங்கம் திருப்தி அடைகிறதா?
06. புதிய அரசாங்கத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மை உதவிகளைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 8 இலட்சம் விண்ணப்பங்கள் தற்போது மேற்கூறிய வகைப்படுத்தலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவா?
07. 2025 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக உலக வங்கி சமர்ப்பித்த அறிக்கை மற்றும் வறுமை குறித்த அங்கீகரிக்கப்பட்ட ஏனைய ஆராய்ச்சி தரவுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா?
08. ஆமெனின், அந்தத் தரவுகளின் அடிப்படையில் அஸ்வெசும திட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? இல்லையென்றால், அரசாங்கத்திடம் காணப்படும் மாற்றுத் திட்டம் யாது ?
09. வறுமையை ஒழிக்க அரசாங்கம் குறிப்பிட்டதொரு வேலைத்திட்டத்தை முன்வைக்குமா? இதன் மூலம் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் மைல்கற்கள் யாவை?
ஆகிய கேள்விகளை சஜித் பிரேமதாச முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
