செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்…
ஈழத் தமிழரின் நிலமே இன்று போராடுகிறது. ஒரு புறத்தில் நிலம்மீது ஆக்கிரமிப்பு. மற்றொரு புறத்தில் நிலத்தில் இருந்து இனவழிப்பின் எச்சங்களாக எலும்புக்கூடுகள் எழுகின்றன.
உண்மையில் செம்மணி என்பது நீதிக்காக நிலத்தின் கீழிலிருந்து எலும்புக்கூடுகள் எழுந்து போராடுகின்ற ஓரிடம்.
இதுநாள் வரை ஈழத் தமிழ் தாய்மார்கள் சிறிலங்கா அரசை நோக்கியும் கண்ணீர் படிந்த முகத்தோடு உலகை நோக்கியும் நீதியைக் கோரிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்போது சித்திரவதையின் பெருங்குரலொலியுடன் இந்த எலும்புக்கூடுகள் நீதிக்காக எழுந்துள்ளன.
புதைகுழியாக்கப்பட்ட நிலம்
வடக்கு கிழக்கின் இடங்கள் பலவும் வெறுமனே நிலங்களல்ல. அவை நினைவுகளின் கல்லறைகளாகவும், மறைக்கப்பட்ட உண்மைகளின் சாட்சிகளாகவும், நீதிக்காகக் காத்திருக்கும் மக்களின் மௌனக் குரல்களாகவும் உருக்கொண்டுள்ளன.
அவ்வாறான இடங்களில் மிக முக்கியமானது செம்மணி. யாழ்ப்பாணத்தின் புறநகரப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலப்பரப்பு, பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நினைவிடமாகவும், ஈழ மக்கள்மீதான இனவழிப்பின் சின்னமாகவும் நிற்கிறது.
1990களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் மீண்டும் இலங்கை அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பலர் இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் எண்ணற்றோர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தாய்மார்கள் முகாம்களின் வாசல்களில் நின்று பிள்ளைகளைத் தேடினர்.
மனைவிகள் கணவர்களின் பெயர்களை இராணுவ அதிகாரிகளிடம் கேட்டனர். குழந்தைகள் தந்தையரின் வருகைக்காக ஆண்டுகளாகக் காத்திருந்தனர். இன்றுவரை அந்த மக்களுக்குப் பதிலேதும் வழங்கப்படவில்லை.
கிருஷாந்தி படுகொலை
அந்தக் காலகட்டத்தில் மிகவும் அச்சுறுத்தலான இடமாகப் பெயர்பெற்றது செம்மணி இராணுவ முகாம். கைது செய்யப்பட்டவர்கள் அங்கு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகப் பல சாட்சிகள் கூறினர்.
காணாமலாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் தடங்கள் அந்த முகாமை நோக்கிச் சென்றாலும், அவர்களின் வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் எங்கே முடிந்தது என்பது தெரியாமலேயே இருந்தது.
1998ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவத்தினருள் ஒருவரான சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வாக்குமூலம் உலகின் கவனத்தை செம்மணியை நோக்கித் திருப்பியது.
நீதி மறுப்பு
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உண்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டிய அந்த முயற்சிகள் இலங்கை அரசின் திட்டமிட்ட செயல்களால் நீதியை வழங்காது போயின.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் சிலவற்றைத் தாண்டி விசாரணை முன்னேறவில்லை. காணாமலாக்கப்பட்ட மக்களின் குடும்பங்கள் எதிர்பார்த்த உண்மை வெளிப்படவில்லை. செம்மணி விடயத்தில் உண்மையை மறைக்கும் சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இருபத்தெட்டு ஆண்டுகள் ஆகின்ற இன்றைய காலத்தில் மீண்டும் செம்மணியின் அகழ்வுப் பணி இடம்பெற்று வருகின்றன. காலங்கள் வேகமாக நகர்ந்தபோதும், பல ஆட்சிகள் மாறிய போதும் செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மைகள் நிலத்தினுள்ளேயே அடக்கப்பட்டன.
அவர்களை யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. அவர்கள் எதற்காக அழிக்கப்பட்டனர் என்பதற்கான பதிலும் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. விசாரணைகளும் நீதி நடவடிக்கைகளும்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பதிலும் தீர்வுமாகும்.
இலங்கையின் பாரிய மனிதப் புதைகுழி
இலங்கையில் நடைபெற்ற போரும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த காணாமலாக்கல்களும், கூட்டுப் புதைகுழிகளும், தமிழர்களின் அரசியல் நினைவகத்தின் ஒரு பகுதியாகிவிட்டன.
மன்னார் சாத்திக்குளம், கொக்குத்தொடுவாய், கெமுனுபுரம், மற்றும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைப் போலவே, செம்மணியும் இலங்கையின் மிக முக்கியமான மனிதப் புதைகுழி.
இன்று 400இற்கு மேற்படப்ட எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி என்ற அடையாளத்தைச் செம்மணி பெற்றிருக்கிறது.
ஒரு இனக்குழுவின் வேதனையை மறைப்பதற்காக மண்ணுக்குள் புதைக்கப்பட்ட வரலாற்றின் விடையை அறிவது அவசியமானது. உண்மையில் ஒவ்வொரு எலும்புக்கூடும் ஒரு குடும்பத்தின் கண்ணீரையும் காத்திருப்பையும் நீதிக்கான தவிப்பையும் தாங்கி நிற்கிறது.
ஒவ்வொரு மண்டையோடும் ஒரு முடிக்கப்படாத வாழ்க்கைக் கதையைச் நமக்குச் சொல்கிறது. அதிலிருக்கும் ஒவ்வொரு வெடிப்புகளும் உடைவுகளும் மாபெரும் காயத்தின் வலியை நமக்குள் கடத்துகிறது. ஒவ்வொரு எலும்புக்கூடுகளின் வாக்குமூலங்களும் நம் செவிகளில் விழ ஈழ நிலமே அமைதியற்றுக் கண்ணீரோடு தவிக்கின்றது.
கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் PTA... அரசின் சட்ட அறியாமையைச் சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார்
சர்வதேச விசாரணை
செம்மணியின் மண்ணின் கீழிலிருந்து எழும் ஒவ்வொரு எலும்புக்கூடும் இந்த நாட்டின் மனச்சாட்சியை நோக்கி விரல் நீட்டுகிறது. அந்த விரல் இலங்கையின் நீதித்துறையை நோக்கியும் சர்வதேச சமூகத்தை நோக்கியுமே நீள்கிறது.
ஒரு தீவில் மாபெரும் மனிதப் புதைகுழியிலிருந்து எழும் இந்த எலும்புக்கூடுகளுக்கு இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். அண்மையில் ஶ்ரீலங்கா நீதியமைச்சர் செம்மணிக்கு வரகை தந்து அகழ்வுப் பணிகளைப் பார்த்திருந்தார்.
இலங்கையின் இன்றைய நீதித்துறையாவது செம்மணிக்கு நீதியைத் தருமா? ஈழ மண்ணில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளில் பலர் நீதியைக் காணாமலேயே போராடிப் போராடியே மாண்டுவிட்டனர்.
இன்னும் பலர் தமது உறவுகளின் புகைப்படங்களை கையில் ஏந்திக்கொண்டு தொடர்ந்து போராடுகின்றனர்.
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கான நீதியை உரிய முறையில் இலங்கை அரசு முன்வைக்குமா என்ற ஐயம் தமிழர்களிடம் இருக்கிறது. சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதி ஒன்றுதான் ஈழத்தில் நடந்த அத்தனை படுகொலைகளுக்குமான நீதியைப் பெற்றுத்தரும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 6 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்