கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் PTA... அரசின் சட்ட அறியாமையைச் சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார்
சிறிலங்காவின் சமகால அரசியல் - சட்டச் சூழலில் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் தனிமனித அடிப்படை உரிமைகள், குறிப்பாகத் தமிழ் மக்களின் சிவில் உரிமைகள் நசுக்கப்படுவது இன்றும் தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக அண்மையில் சொல்லிசைப்பாடகர் சங்கீர்ஷன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை, சிறிலங்காவின் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் சட்ட அறியாமையையும், அரசியல் போலித்தனத்தையும் சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தோ அல்லது அவ்வியக்கம் குறித்தோ பேசுவது பயங்கரவாதமா ? இத்தகைய கைதுகளை மேற்கொள்ளும் அரசுக்குச் சட்டம் தெரியாதா ? அல்லது தெரிந்தே சட்டத்தை ஆயுதமாக்குகிறதா ? இலங்கையின் சட்ட மற்றும் சர்வதேச விழுமியங்களின் பின்னணியில் இதனை விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறது இந்தக்கட்டுரை.
1. தலைவர் பிரபாகரனைப் பற்றிப் பேசுவது பயங்கரவாதமா ? சட்டத்தின் பதில் என்ன ?
பொதுவாக அரசியல் உள்நோக்கம் கொண்ட அரச இயந்திரம் இதனைப் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தினாலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டக் கோட்பாடுகளின்படி இது முற்றிலும் சட்டவிரோதமான கைது நடவடிக்கையாகும்.
அதாவது நேரடித் தொடர்புக் கோட்பாடு (Principle of Proximity) இங்கு மீறப்படுகிறது. குறிப்பாகச் சிறிலங்கா அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(a) குறிப்பிடும்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துகிறது.
இதில் ஒரு கருத்து குற்றமாகவோ அல்லது பயங்கரவாதமாகவோ மாற வேண்டும் என்றால், அங்கு நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். அதாவது, பேசப்படும் பேச்சு உடனடியாக ஒரு வன்முறையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.
அதேபோலவே யுத்தத்திற்குப் பின்னரான சூழல், அதாவது முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், போர் இல்லாத காலத்தில் ஒரு வரலாற்றின் தலைவரைப் பற்றியோ அல்லது கடந்தகால இயக்கம் ஒன்றைக் குறித்தோ தார்மீக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ பேசுவது வன்முறையைத் தூண்டாதவரை அது வெறும் கருத்து மட்டுமே.
🛑 புகழாரம் சூட்டல் vs பயங்கரவாதம்
உண்மையில் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களின்படி (குறிப்பாக ICCPR உடன்படிக்கை), கடந்தகால நினைவுகளைக் கொண்டாடுவதோ, புகழ்ந்து பேசுவதோ சட்டத்தின் பார்வையில் குற்றவியல் வன்முறையாகாது என்கிறது. எனவே, அதனைப் பயங்கரவாதமாக வகைப்படுத்துவது சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது ஆகும்.
2. அரசுக்குச் சட்டம் தெரியாதா ? சட்டத்தை ஆயுதமாக்கும் பேரினவாதம்
நேற்று நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உங்களுக்குச் சட்டம் சம்பந்தமாக இருக்கிற அறிவின்மைத் தன்மைதான் இதைக்காட்டுகிறது என்று குறிப்பிட்டதன் பின்னால் ஓர் ஆழமான மூலோபாய உண்மை மறைந்து காணப்படுகிறது.
ஆனால் உண்மையில் அரசுக்குச் சட்டம் தெரியாமல் இல்லை, மாறாகச் சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்தே தனது அடக்குமுறைக்காக அதை அரசு பயன்படுத்துகிறது.
🛑 தெளிவற்ற வரைவிலக்கணம்
சிறிலங்காவின் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் அவசரகால விதிமுறைகளில் பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் மிக விஸ்தாரமாகவும் அதேநேரம் தெளிவற்றதாகவும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு தனக்கு எதிரான எந்தவொரு கருத்தையும் பயங்கரவாதத்திற்குத் துணைபோதல் எனத் தன்னிச்சையாக வியாக்கியானம் செய்கிறது.
🛑 நீதிமன்ற விசாரணையின்றி தண்டிக்கும் முறை
அதாவது PTA இன் கீழ் ஒருவரைக் கைது செய்தால் நீண்ட காலம் பிணையின்றிச் சிறையில் வைக்க முடியும் என்பது அரசுக்குத் தெரியும். இதனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், செயற்பாட்டாளர்களைச் சிறையில் அடைத்துப் பழிவாங்கும் ஒரு கருவியாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
3. அரசியல் போலித்தனமும் முதுகெலும்பற்ற அரசாங்கமும்
குறிப்பாக இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் மிக மோசமான அரசியல் தோல்வியும் போலித்தனமும் அம்பலப்பட்டுள்ளது.
🛑 தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தப்படும் சட்டம்
சிறிலங்கா அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சரே (தியாகதீபம் திலீபன் போன்றோரின்) நினைவேந்தல் இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி அங்குச் சொந்தம் கொண்டாட முடிகிறது ஏனெனில் அவர் அரசாங்கப் பிரதிநிதி.
ஆனால், அதே நினைவேந்தலையோ அல்லது கருத்துகளையோ சாதாரண தமிழ் மக்களோ அரசியல் செயற்பாட்டாளர்களோ முன்னெடுக்கும்போது சட்டம் அவர்கள் மீது பாய்கிறது.
சட்டம் என்பது தமக்கு ஒரு நீதியும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியுமாகப் பயன்படுத்தப்படுவதையே இது காட்டுகிறது.
அதேநேரம் சர்வதேச அரங்கில் UNHRC போன்ற தளங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதாகப் பம்மாத்து காட்டும் சிறிலங்கா அரசாங்கம், உள்நாட்டில் பேரினவாத வாக்குவங்கியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றது.
தற்காலிகமாகவேனும் இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கும் தார்மீகத் துணிச்சல் அல்லது முதுகெலும்பு தற்போதைய ஆட்சியாளர்களிடம் இல்லை என்ற கஜேந்திரகுமாரின் சாடல் மிகப்பொருத்தமானது.
4. சித்தாந்தத் தோல்வியும் அரசின் பகற்கனவும்
உண்மையில் சட்ட ரீதியான அடக்குமுறைகள் மற்றும் சிறைவாசங்கள் மூலம் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு நினைவுகளையும் அரசியல் அபிலாஷைகளையும் அழித்துவிட முடியும் என்று அரசு நினைப்பது ஒரு பகற்கனவாகும்.
யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் அரசியல் தீர்வற்றுப்போன ஏமாற்றமே கடந்தகால அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீதான தார்மீகப் பற்றை அல்லது அவர்கள் மீள வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தொடுத்து நிற்கிறது.
மக்களின் இந்த நியாயமான மனநிலையைத் தனது அரசியல் தோல்விகளை மூடிமறைக்க அரசு பயன்படுத்த முற்படுகிறது.
உண்மையில் தலைவர் பிரபாகரனைப் பற்றியோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்தோ பேசுவது தற்போதைய சட்டங்களின் படியும் சர்வதேச மனித உரிமை விழுமியங்களின் படியும் பயங்கரவாதம் ஆகாது.
அதேநேரம் இது, அரசுக்குச் சட்டம் தெரியாமல் நடப்பதல்ல, சட்டம் தெரிந்தே தமிழ் மக்களின் அரசியல் குரலை ஒடுக்குவதற்காக அது பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய தன்னிச்சையான சட்டப் பயன்பாடு, நாட்டின் சட்டத்தின் ஆட்சி என்ற தத்துவத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.
அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் கருத்துகளைத் தற்காலிகமாக மௌனிக்கலாமே தவிர, தமிழ் மக்களின் அரசியல் தாகத்தையோ உரிமைக் குரலையோ ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என்பதைச் சிறிலங்காவின் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |