சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான்: ஹிரோஷிமா-நாகசாகி ஈழத்திற்குச் சொல்லும் பாடம்…
உலக வரலாற்றில் சில நாட்களை ஒருபோதும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடிவதில்லை. அவை நாட்காட்டியில் ஒரு திகதியாக மாத்திரம் இருப்பதில்லை.
மனித குலத்தின் மனச்சாட்சியில் அழியாத காயங்களாக நிலைத்திருக்கின்றன.
அந்தக் காயங்களின் கதை, மீள மீள வாசிக்க வேண்டிய ஒரு பாடமாகவும் இருக்கிறது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் திகதிகளும் அத்தகைய நாட்களே. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகள் இரண்டு நகரங்களை மட்டுமல்ல, மனித நாகரிகத்தின் மீதான நம்பிக்கையையும் உலுக்கின.
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை (2006): 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம்
பேரழிவின் நினைவு
இரண்டாம் உலகப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த காலமது. அமெரிக்கா, ஜப்பானை சரணடையச் செய்வதற்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது ‘லிட்டில் பாய்’ எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது ‘ஃபாட் மேன்’ எனப் பெயரிடப்பட்ட இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது.
சில நொடிகளில் நகரங்கள் தீப்பந்தங்களாகின. மனிதர்கள் கருகினர். வீடுகள் சிதைந்தன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.
ஆனால் அணுகுண்டின் அழிவு அந்த நாளுடன் முடிந்துயவில்லை. குண்டுவெடிப்பில் இருந்து உயிர் தப்பியவர்கள் பின்னர் கதிர்வீச்சின் கொடூரத்தை அனுபவித்தனர்.
உடலில் ஏற்பட்ட தீக்காயங்கள், நோய்கள், புற்றுநோய்கள், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்த உடல்நலப் பாதிப்புகள் என அந்தப் போரின் நிழல் பல ஆண்டுகள் நீடித்தது. இப்படித்தான் போர் உலகம் முழுவதும் நீள்கிறது. ‘ஹிபாகுஷா’ என்று அழைக்கப்பட்ட அணுகுண்டு உயிர்தப்பிகள் தங்கள் உடல்களில் மட்டுமல்ல, நினைவுகளிலும் அந்த அழிவை சுமக்க நேரிட்டது.
அவர்கள் மீண்டெழுந்தனர்
ஆனால் இங்கேதான் ஜப்பானின் வரலாறு ஒரு முக்கியமான திருப்பத்தை எடுத்தது. சாம்பலாகிப் போன நகரங்களை பார்த்து ஜப்பானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தையும் சாம்பலாக்கவில்லை.
அவர்கள் மீண்டும் எழுந்தனர். வீடுகளை கட்டினர். பள்ளிகளைத் திறந்தனர். தொழிற்சாலைகளை நிறுவினர். அறிவியலை வளர்த்தனர். கல்வியை முன்னிறுத்தினர். உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக ஜப்பான் மாறியது.
ஹிரோஷிமா இன்று வெறும் அழிக்கப்பட்ட நகரத்தின் நினைவுச்சின்னமாக மாத்திரமின்றி உயிர்வாழ்வினதும் போராட்டத்தினதும் அடையாளமாகவும் நிற்கிறது. நாகசாகியும் அதேபோல். அழிவை நினைவில் வைத்துக்கொண்டபடியே எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை உலகிற்கு காட்டிய நகரமே.
இதன் பொருள் அவர்கள் தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டார்கள் என்பதல்ல. மாறாக, அவர்கள் கடந்த காலத்தை நினைவாகப் பாதுகாத்தார்கள். அணு ஆயுதங்களின் ஆபத்தை உலகிற்கு தொடர்ந்து எடுத்துச் சொன்னார்கள்.
தங்கள் குழந்தைகளுக்கு போரின் விலையை – போரின் முகத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். அதனால் விழைந்த பேரழிவினை எச்சரிக்கும் நினைவிடங்களை உருவாக்கினர்.
அருங்காட்சியகங்களை அமைத்தனர். உயிர்தப்பியவர்களின் சாட்சிகளைப் பதிவு செய்தனர். இப்படியாக வரலாற்றை அழித்துவிடாமல் அதிலிருந்து எதிர்காலத்தை கட்டியெழுப்பினார்கள்.
யப்பானும் ஈழமும்
இந்த இடத்தில்தான் ஹிரோஷிமாவும் நாகசாகியும் ஈழ மக்களிடம் ஒரு ஆழமான கேள்வியை எழுப்புகின்றன.
போரால் அழிக்கப்பட்ட ஒரு சமூகமாக நாம் எதைச் செய்கிறோம்? ஈழத் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாகப் போர், படுகொலைகள், இடப்பெயர்வுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறை, சித்திரவதை, நிலப்பறிப்பு, பொருளாதார அழிவு என எண்ணற்ற காயங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் என்பது நமது கூட்டு நினைவில் ஒரு காயமாக இருக்கிறது. செம்மணி, குமரபுரம், நாகர்கோவில், சத்துருக்கொண்டான், திராய்க்கேணி, வல்வெட்டித்துறை என எண்ணற்ற இடங்கள் எமது வரலாற்றின் இரத்தச் சாட்சிகளாக நிற்கின்றன.
ஆனால் ஜப்பானின் அனுபவம் சொல்லும் பாடம், காயங்களை மறந்துவிடுங்கள் என்பதல்ல. மாறாக, காயங்களை நினைவாக மாற்றுங்கள். நினைவுகளை அறிவாக மாற்றுங்கள். அறிவை எதிர்காலமாக மாற்றுங்கள்.
ஒரு மக்கள் அழிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் தங்கள் மொழியைப் பாதுகாக்க முடியும். தங்கள் கல்வியைப் பாதுகாக்க முடியும். தங்கள் பண்பாட்டை மீட்டெடுக்க முடியும். தங்கள் வரலாற்றை எழுத முடியும். தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் கடந்த காலத்தைச் சொல்ல முடியும். அதுவே ஒரு ஒரு இனத்தின் ஒரு தேசத்தின் உயிர்வாழ்வுக்கு அடிப்படையாகிறது.
மீள் எழுதல் என்பது
ஜப்பான் எப்படி தன் நகரங்களை மீண்டும் கட்டியெழுப்பியது என்பது ஈழத்திற்கும் உலகிற்கும் ஒரு பெருங்கதை, ஒரு பெரும்பாடம். ஈழத் தமிழர்களும் தங்கள் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.
ஆனால் கட்டடங்களை மாத்திரமல்ல. கட்டங்கள் கட்டி எழுப்பப்படுவது மாத்திரம் வளர்ச்சியல்ல. கல்வியை. பொருளாதாரத்தை. கலை இலக்கியத்தை. அறிவியலை. சமூக நிறுவனங்களை.
நினைவகங்களை. வரலாற்றுப் பதிவுகளை. போர் முடிவடைந்துவிட்டதாக அரசுகள் அறிவிக்கலாம். ஆனால் ஒரு மக்களின் மனதில் போர் முடிவடைவதற்கு பல தலைமுறைகள் தேவைப்படலாம். அதனால் மீள் வாழ்வு என்பது வெறும் வீடுகளை அமைப்பதஅல்ல. உடைந்த சமூக நம்பிக்கையை மீண்டும் உயிரூட்டுவதாகும்.
ஒரு நகரத்தை அழிக்க முடியும்; ஒரு தலைமுறையை காயப்படுத்த முடியும்; ஆனால் ஒரு மக்கள் தங்கள் நினைவையும் அறிவையும் எதிர்காலக் கனவையும் பாதுகாத்துக்கொண்டால் அவர்களை முழுமையாக அழித்துவிட முடியாது என்பது ஹிரோஷிமா நமக்குச் சொல்லும் மிகப் பெரிய பாடம் இதுதான்: நாகசாகியின் சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான், அழிவுக்குப் பின்னரும் மனிதன் மீண்டும் எழ முடியும் என்பதற்கான சாட்சியாக நிற்கிறது.
ஈழமும் ஒருநாள் தன் காயங்களின் மீது நின்றுகொண்டு எழ வேண்டும். அதற்கு முதலில் நாம் எமது வரலாற்றை மறக்கக் கூடாது. இரண்டாவதாக, அந்த வரலாற்றை வெறும் துயரமாக மாத்திரம் வைத்திருக்கக் கூடாது.
மூன்றாவதாக, அடுத்த தலைமுறைக்கு அழிவின் கதையை மட்டும் சொல்லாமல், மீண்டெழும் மக்களின் கதையையும் சொல்ல வேண்டும். ஹிரோஷிமாவும் நாகசாகியும் இன்று உலகத்திடம் அணுகுண்டுக்கு எதிராகப் பேசுகின்றன.ஈழத்தின் மண்ணும் ஒருநாள் அதன் புதைகுழிகளிலிருந்து எழுந்து, போர் எதைச் செய்தது என்பதை உலகத்திடம் சொல்ல வேண்டும்.
கலை இலக்கியங்கள், அரசியல், போராட்டம் என எல்லா வழிகளிலும் எமது குரல் மிக நேர்த்தியோடு இதைச் செய்ய வேண்டும். சாம்பலில் இருந்து எழுவது மறப்பதற்கான எத்தணமல்ல. நினைவோடு மீண்டும் வாழத் தொடங்குவதாகும்.
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை (2006): 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 10 August, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.