உலக நீர் கண்காணிப்பு நாள்: தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம்…
நீரின்றி அமையாது உலகு. மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான நீர், இன்று உலகின் பல பகுதிகளில் கிடைப்பதும் பாதுகாப்பாக இருப்பதும் பெரும் சிக்கலாகியுள்ளது.
குடிப்பதற்கான நீர், விவசாயத்திற்கான நீர், தொழில்துறைக்கான நீர் என அதன் பயன்பாடு விரிவடைந்துகொண்டிருக்கிறது.
அதேவேளை காலநிலை மாற்றம், நீர் மாசுபாடு, நிலத்தடி நீரின் அளவுக்கதிகமான பயன்பாடு, தொழிற்சாலை மற்றும் விவசாயக் கழிவுகள் என்பன நீரின் தரத்தையும் இருப்பையும் பாதித்து வருகின்றன.
இத்தகைய நிலையில் செப்டெம்பர் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக நீர் கண்காணிப்பு நாள், நீரைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் தரத்தையும் பாதுகாப்பையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
கண்காணிப்பு நாளின் வரலாறு
உலக நீர் கண்காணிப்பு நாள் 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் Clean Water Foundation மற்றும் சர்வதேச நீர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் நீரின் தரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மக்கள் தங்களது உள்ளூர் ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை அடிப்படையான முறையில் பரிசோதிப்பதில் பங்கேற்பதுமே இதன் நோக்கமாகும்.
நீரின் வெப்பநிலை, pH, தெளிவு மற்றும் கரைந்துள்ள ஒட்சிசன் போன்ற அடிப்படை அளவீடுகளை பொதுமக்களே மேற்கொள்ளும் வகையில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஒக்டோபர் 18ஆம் திகதி அனுஷ்டிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த நாள் பின்னர் செப்டெம்பர் 18ஆம் திகதியாக மாற்றப்பட்டது. அதன் அடிப்படை நோக்கம் இன்றும் மாறவில்லை.
நீரின் நிலை குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் மக்கள் பங்கெடுக்க வேண்டும். ஆனால் இன்று நீர் நிலைகளை குப்பைத் தொட்டிகளாக மக்கள் பயன்படுத்துகின்றமைதான் பேரவலம்.
ஆறகளிலும் குளங்களிலம் குப்பைகளையும் கழிவுகளையும் வீசுகின்ற நிலையே இருக்கிறது.
ஏன் நீரைக் கண்காணிக்க வேண்டும்?
நீர் இருப்பது மட்டும் போதாது. அது குடிப்பதற்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் வரையறுக்கும் ‘பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் குடிநீர்’ என்பது வீட்டிலேயே கிடைக்கக்கூடியதாகவும், தேவையான நேரத்தில் போதுமான அளவில் கிடைக்கக்கூடியதாகவும், மலக்கழிவு மற்றும் முக்கிய இரசாயன மாசுபாடுகளிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
உலகம் முன்னேறிக்கொண்டிருந்தாலும் நீர் நெருக்கடி முடிவுக்கு வரவில்லை என்பது மாத்திரம் அதிர்ச்சியான விடயமல்ல. முன்னெற்றத்திற்கு நேர் எதிராக நீருக்கு எதிரான செயல்கள் உயர்வதுதான் நம் காலத்தின் அபத்தமும் துயரமும்.
2024ஆம் ஆண்டில் உலக மக்களில் சுமார் 2.1 பில்லியன் பேர் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் குடிநீரைப் பெறவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 106 மில்லியன் பேர் நேரடியாக ஆறுகள், ஏரிகள் போன்ற மேற்பரப்பு நீரைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் நீர் கண்காணிப்பு என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கான ஒரு நடவடிக்கையாக இல்லாமல், அது பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, விவசாயம், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வுடன் - பொறுப்புடன் நேரடியாகத் தொடர்புடையது.
நீர் வளம் இருந்தும் நெருக்கடியைச் சந்திக்கும் இலங்கை
இலங்கை நீர்வளம் குறைந்த நாடல்ல. ஆண்டுதோறும் கணிசமான மழைப்பொழிவைப் பெறும் நாட்டில் 103 ஆற்றுப்படுகைகள் உள்ளன.
ஆனால் நீரின் கிடைப்பில் காலத்திற்கும் பிரதேசத்திற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அரசாங்கத்தின் தேசிய நீர்க் கொள்கை ஆவணம், நாட்டில் நீர் வளம் மொத்த அளவில் போதுமானதாகத் தோன்றினாலும், மழையின் காலநிலை மற்றும் பிரதேச ரீதியான மாறுபாடுகளால் நீர் பற்றாக்குறை ஏற்படுவதாகக் குறிப்பிடுகிறது.
நாட்டின் மொத்த நீர் பயன்பாட்டில் விவசாயமே சுமார் 87 வீதத்தைப் பயன்படுத்துகிறது. இலங்கையின் இன்னொரு முக்கியமான பிரச்சினை நீரின் தரம். வடக்கு மற்றும் வடமேற்கு கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீரில் இரும்பு, நைட்ரேட் உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுவதுடன், யாழ்ப்பாணக் குடாநாடு போன்ற கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சுவதால் நீரின் அளவும் தரமும் பாதிக்கப்படுவதாக அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
கடல்நீர் உட்புகுதல், விவசாய இரசாயனங்களின் பயன்பாடு, தொழிற்சாலை கழிவுகள் ஆகியவையும் நிலத்தடி நீருக்கு அச்சுறுத்தல்களாகும்.
வடக்கு–கிழக்கின் நீர்க் கவலை
வடக்கு–கிழக்கு மக்களின் வாழ்க்கையில் நீர் என்பது இன்னும் கூர்மையான ஒரு பிரச்சினை. குறிப்பாக வடக்கில் பெருமளவான மக்கள் நிலத்தடி நீரையே குடிநீருக்கும் விவசாயத்திற்கும் நம்பியுள்ளனர்.
மழை குறையும் காலங்களில் கிணறுகள் வற்றுவதும், உவர்நீர் உட்புகுவதும், விவசாய இரசாயனங்களால் நீர் மாசடைவதும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கின்றன.
16ஆண்டுகளுக்கு முதலில் வடக்கு கிழக்கில் தண்ணீர் காசுக்கு விற்பனை செய்வது இடம்பெறவில்லை. இன்று முழுக்க முழுக்க குடிப்பதற்கான நீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்.
அத்துடன் கிணறுகள் பழுதடைந்த அல்லது பாவனைக்கு பொருத்தமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நீரின் தரம் சீரழிவதை நம் கண்ணின் முன்னால் காண்கிற நிலையை பெரும் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும்.
நீண்டகாலப் போர், இடப்பெயர்வு, அடிப்படை வசதிகளின் அழிவு ஆகியவற்றின் பின்னணியில் வடக்கு–கிழக்கின் பல கிராமங்கள் இன்னமும் நீர்ப்பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றன.
2025ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமூக நீர் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பத்து கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டு குளோரினேற்றப்பட்டதுடன், 650 குடும்பங்களுக்கு பாதுகாப்பான நீர் வழங்கப்பட்டதாக UNICEF பதிவு செய்துள்ளது.
இது ஒரு சிறிய எண்ணிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஒரு கிராமத்தின் கிணறு மாசடைந்தால் அதன் தாக்கம் ஒரு குடும்பத்தை மாத்திரம் பாதிப்பதில்லை. குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் என முழுச் சமூகத்தின் வாழ்வும் அதனால் பாதிக்கப்படுகிறது.
உண்மையில், ஒவ்வொரு கிராமத்தினதும் கிணறு, குளம், ஆறு, நீர்த்தேக்கம் ஆகியவற்றின் நீர்த் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்பட வேண்டும். மாசுபாட்டின் மூலங்கள் கண்டறியப்பட வேண்டும்.
நிலத்தடி நீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் நீர்நிலைகளைச் சென்றடையாத வகையில் முறையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.
நீரை இழந்த பின்னர் அதனைத் தேடுவதைவிட, நீர் இருக்கும்போதே அதைப் பாதுகாப்பதே அறிவார்ந்த ஒரு சமூகத்தின் வினைத்திறனான செயற்பாடாகும். நீரின் நிறத்தையும் அளவையும் கண்காணித்து அதன் தரம் காப்பது என்பது எதிர்கால தலைமுறையின் இருப்பை பாதுகாக்கின்ற மிக அவசியமான பணியாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |