காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தக நிலையத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து நேற்று முன்தினம் (16.09.2026) முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.
இம்முறைப்பாட்டையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் அவசர உத்தரவிற்கமைய, பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த கடையில் திடீர்ச் சோதனையை மேற்கொண்டனர்.
அதிகாரிகளால் பறிமுதல்
இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் காலாவதி திகதி முடிவடைந்த பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமைக்காகச் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |