நாடு கடத்தப்படவுள்ள பசில்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள செயன்முறை
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் முறைசார்ந்த செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு குற்றவியல் வழக்குகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட கைது பிடியாணைகள் குறித்து முன்னிலையாப தவறியதன் காரணமாக அவருக்கு சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்று காவல்துறையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
INTERPOL உதவி
லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருவதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரை இலங்கை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த INTERPOL உதவியையும், சிவப்பு அறிவிப்பையும் கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாத்தறை பகுதியில் காணி கொள்வனவு தொடர்பாக பல மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) தாக்கல் செய்துள்ள வழக்குகளுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாக தவறியதன் காரணமாகவே இந்தக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும், குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தின் சட்ட விதிகளின் அடிப்படையிலும், வெளிவிவகார அமைச்சுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய கடிதப் பரிமாற்றங்களின் ஊடாகவும் நாடு கடத்தல் கோரிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச சட்ட நடவடிக்கை
எவ்வாறாயினும், இந்த சர்வதேச சட்ட நடவடிக்கை தானாகவே கைது செய்வதற்கோ அல்லது அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கோ வழிவகுக்காது.
சம்பந்தப்பட்ட அமெரிக்க சட்ட நடைமுறைகள் மற்றும் சமர்ப்பிக்கப்படும் ஆதார ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
இத்தகைய உயர்மட்ட அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக சர்வதேச அளவில் சட்ட நடைமுறையாக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.