முதல் இனப்படுகொலையெனப்படும் கல்லோயாப் படுகொலையின் நினைவுநாள்
தமிழர் வரலாற்றில் சில இடங்கள் வெறும் புவியியல் பெயர்களாக இல்லை. அவை காயங்களின் பெயர்கள்.
அவை இன்னும் ஆறாத நினைவுகளின் பெயர்கள். அவை ஒரு இனத்தின் எதிர்காலத்தை முன்னரே எச்சரித்த இரத்தச் சாட்சிகளின் பெயர்கள்.
அந்த வகையில் கல்லோயா என்பது ஒரு ஆற்றின் பெயரல்ல. அது தமிழர்களின் கூட்டு நினைவில் பதிந்திருக்கும் முதல் பெரிய இனவன்முறையின் பெயர்.
கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் PTA... அரசின் சட்ட அறியாமையைச் சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார்
குடியேற்ற அரசியல்
1956 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கல்லோயாவில் நிகழ்ந்த படுகொலை, தமிழர் மீது திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட முதல் பெரிய இனஅழிப்பு வன்முறையாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
அப்போது சிங்களம் மட்டும் என்ற சட்டம் நாட்டின் அரசியல் காற்றை விஷமாக்கிக் கொண்டிருந்தது. மொழியை ஆயுதமாக மாற்றிய அரசியல், பின்னர் மனிதர்களையே இலக்காக மாற்றியது.
அமைதியான சத்தியாகிரகத்தில் அமர்ந்திருந்த தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அந்த வன்முறையின் நெருப்பு பின்னர் கிழக்கின் மண்ணை நோக்கி நகர்ந்தது. அதன் கொடிய உச்சம் கல்லோயாவில் நிகழ்ந்தது. கல்லோயா என்பது வெறும் கலவரத்தின் இடமல்ல.
அது அரச ஆதரவுடனான குடியேற்ற அரசியலின் ஆய்வுகூடமாக இருந்தது. தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களின் நடுவே திட்டமிட்டு மக்கள் தொகை மாற்றம் நிகழ்த்தப்பட்ட இடம்.
நிலமும் நீரும் அதிகாரமும் ஒரே திசையில் நகர்த்தப்பட்ட இடம். அந்த மாற்றத்தின் மத்தியில் வாழ்ந்த தமிழர்கள், தங்கள் மண்ணிலேயே அந்நியர்களாக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் உயிர்களும் இலக்குகளாக்கப்பட்டன.
கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டம்
1950களில் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஒரு நீர்ப்பாசனத் திட்டமாக மட்டும் முன்வைக்கப்படவில்லை. அது கிழக்கு மாகாணத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்றியமைக்கும் அரசியல் நோக்கங்களுடனும் முன்னெடுக்கப்பட்டதாக தமிழர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பாரம்பரியமாக தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்த பகுதிகளில் தென்னிலங்கையிலிருந்து பெருமளவில் சிங்களக் குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்பட்டனர்.
இதனால் நில உரிமை, நீர் வளங்களின் பயன்பாடு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொருளாதார வாய்ப்புக்கள் தொடர்பாக இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்தன.
இந்தப் பதற்றமான சூழ்நிலையே பின்னாளில் வெடித்த இனவன்முறைக்கான சமூக மற்றும் அரசியல் அடித்தளத்தை உருவாக்கியது. கொழும்பில் தமிழரசுக் கட்சியின் அறவழிப் போராட்டம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், தமிழர்களுக்கு எதிரான இனவெறி நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது.
குறிப்பாக கல்லோயா குடியேற்றப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டனர். அரச வாகனங்களில் வந்த ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தமிழர் குடியிருப்புகளையும் கிராமங்களையும் தாக்கியதாகப் பல வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். ஐந்து நாட்கள் நீடித்த இந்த இனவெறித் தாக்குதல்களில் 150-க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது பெரிய அளவிலான இனப்படுகொலைத் தாக்குதலாக கல்லோயாப் படுகொலைகள் தமிழர் அரசியல் நினைவில் நிலைத்திருக்கின்றன.
எல்லை அறியாத இனவெறி
கல்லோயாவில் கொல்லப்பட்டவர்கள் வெறும் மனிதர்கள் அல்லர். அவர்கள் ஒரு மொழியின் குரல்கள். ஒரு மண்ணின் நினைவுகள். ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கைகள். வீடுகள் எரிக்கப்பட்டன.
உடல்கள் சிதைக்கப்பட்டன. கிராமங்கள் வெறிச்சோடின. அச்சத்தால் தப்பியோடிய மக்களின் பாதச்சுவடுகள் இன்னும் அந்த மண்ணின் அமைதிக்குள் மறைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாகப் பல வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
ஆனால் கல்லோயாவின் மிகப் பெரிய துயரம் மரணங்களின் எண்ணிக்கையில் இல்லை. அந்த வன்முறைக்குப் பின்னரும் இந்த நாட்டின் அரசியல் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதில்தான் உள்ளது.
கல்லோயா ஒரு எச்சரிக்கையாக இருந்தது. தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இனவெறி எந்த எல்லையையும் அறியாது என்பதற்கான எச்சரிக்கை. ஆனால் அந்த எச்சரிக்கை கேட்கப்படவில்லை. அதனால்தான் கல்லோயாவின் இரத்தம் 1958 இல் மீண்டும் வழிந்தது.
1977 இல் மீண்டும் வழிந்தது. 1981 இல் யாழ் நூலகத்தின் நெருப்பாக எழுந்தது. 1983 இல் கருப்பு ஜூலையின் தெருக்களில் எரிந்தது.
பின்னர் கிழக்கின் கிராமங்களிலும் வடக்கின் வயல்களிலும் எண்ணற்ற படுகொலைகளாகத் தொடர்ந்தது. இறுதியில் முள்ளிவாய்க்காலின் மணற்பரப்பில் பெருங்கடலாகச் சேர்ந்தது.
மறைக்கப்படும் வரலாறு
கல்லோயாவை நினைவுகூர்வது இறந்தவர்களுக்கான அஞ்சலி மட்டுமல்ல. மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் அரசியல் செயற்பாடாகும். ஏனெனில் அதிகாரம் எப்போதும் நினைவுகளை அழிக்க முயல்கிறது.
குற்றவாளிகள் வரலாற்றை மறுஎழுத முயல்கிறார்கள். படுகொலைகளை கலவரங்களாக மாற்றுகிறார்கள். திட்டமிட்ட வன்முறைகளை தற்செயல் மோதல்களாக சித்தரிக்கிறார்கள். ஆனால் உயிரிழந்தவர்களின் நினைவுகள் பொய்களை ஏற்றுக்கொள்ளாது.
இன்று கல்லோயாவை நினைவுகூரும் போது, நாம் வெறும் கடந்தகாலத்தைப் பார்க்கவில்லை. இந்த நாட்டின் இன்னும் தீர்க்கப்படாத இனநீதிக் கேள்வியையும் பார்க்கிறோம். நீதியின்றி நல்லிணக்கம் இல்லை.
உண்மையின்றி சமாதானம் இல்லை. நினைவின்றி வரலாறு இல்லை. கல்லோயா இன்று ஒரு மௌனமான நிலப்பரப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் மண்ணுக்கடியில் இன்னும் கேட்கப்படாத கதறல்கள் உறங்கிக்கிடக்கின்றன.
அந்தக் கதறல்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதக் காற்றோடு மீண்டும் எழுகின்றன. தமிழர் வரலாற்றின் நீண்ட இருள் பாதையில் கல்லோயா ஒரு தொடக்கக் காயம். அந்தக் காயத்தின் மீது தான் பின்னர் பல பேரழிவுகள் கட்டப்பட்டன.
அதனால் கல்லோயாவை நினைவுகூர்வது கடந்த காலத்தை நினைவுகூர்வது அல்ல. மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாத ஒரு வரலாற்றை எதிர்காலத்திடம் ஒப்படைக்கும் பொறுப்பாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 12 June, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.