அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
இனப்படுகொலை என்பது ஒரு நாளில் நிகழ்ந்து முடிந்துவிடுகிற வன்முறையல்ல. அது ஒரு இனத்தின் நாட்காட்டியையே குருதியால் எழுதிவிடும் வரலாற்றுக் குற்றம்.
தமிழ் மக்களின் நாட்காட்டியைத் திறந்துப் பார்த்தால், பெரும்பாலான மாதங்களிலும், பல நாள்களிலும், ஏதோ ஒரு ஊர் குருதியில் மூழ்கியிருப்பதைக் காணலாம். ஒரே நாளில் ஈழத்தின் வெவ்வேறு பகுதிகளில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் ஏராளம்.
அதனால்தான், சில ஊர்களின் பெயர்களைக் கேட்டவுடன் அங்கு வாழ்ந்த மக்களை அல்ல, அங்கு நிகழ்ந்த இனப்படுகொலையையே முதலில் நினைவுகூரும் நிலைக்கு நமது கூட்டு நினைவு தள்ளப்படுகிறது.
இனப்படுகொலை நிகழ்ந்த நாளோடு அதன் கொடுமை முடிவடைவதில்லை. அதன்பின் தொடங்கும் அச்சம், இடப்பெயர்வு, நில இழப்பு, நீதியின்மை, தலைமுறைகளைக் கடக்கும் உளவியல் காயங்கள் என்பவையே அதன் நீண்ட ஆயுளும் துரத்தும் போருமாகும்.
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இனவழிப்பின் மிகக் கொடூரமான பரிமாணம் இதுவே. இன்று முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்தும், திராய்க்கேணி அதற்கான உயிருள்ள சாட்சியாகவே நிற்கிறது.
கிழக்கின் இனப்படுகொலைகள்
ஈழத்தின் கிழக்கு, இனப்படுகொலைகளின் வரலாற்றை சுமந்து நிற்கும் மண்ணாகும். கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை, வீரமுனை, திராய்க்கேணி என்று ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் இன்னும் ஆறாத குருதிக்கறைகள் உள்ளன.
அந்தக் கறைகளை காலம் அழிக்காமல் தொடர்கிறது. நீதியின் மறுப்பே அவற்றை மேலும் அவற்றை ஆழமாக்கி இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் வரும்போதெல்லாம் கிழக்கின் பல இனப்படுகொலைகள் மீண்டும் நினைவுக்கு வருகின்றன.
அவற்றில், அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணி கிராமத்தில் 1990 ஆகஸ்ட் 6ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, இன்னமும் முழுமையாக நீதி காணாத ஒரு வரலாற்றுக் குற்றமாகவே தொடர்கிறது. மட்டக்களப்பிலிருந்து தெற்கே சுமார் எழுபது கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தமிழர் கிராமமே திராய்க்கேணி.
தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும், தொன்மையான சைவ ஆலயங்களும் நிறைந்திருந்த இந்தக் கிராமம், கிழக்கின் பாரம்பரியத் தமிழர் வாழ்விடங்களில் ஒன்றாகும். இந்த மண்ணையும், அதுபோன்ற அம்பாறையின் பல தமிழர் பகுதிகளையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற பேரினவாத அரசியலின் இரத்தமூட்டிய வெளிப்பாடாகவே திராய்க்கேணி இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது.
தீயில் எரிக்கப்பட்ட முதியவர்கள்
1990 ஆகஸ்ட் 6ஆம் நாள், சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கிராமத்திற்குள் நுழைந்த இனவழிப்பாளர்கள், கோயிலில் தஞ்சமடைந்திருந்த 54 தமிழர்களைப் படுகொலை செய்தனர். ஆனால் அதோடு அவர்கள் நிறுத்திவிடவில்லை. வீடுகளுக்குள் நுழைந்த இனப்படுகொலையாளிகள் பல முதியவர்களை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர்.
உயிர் தப்ப முடியாமல் அவர்கள் தீயில் கருகி இறந்தனர். அத்துடன் பதின்மூன்று வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமான சித்திரவதைகளுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் அன்றைய நாளின் மனிதாபிமானத்தைச் சிதைத்த அத்தியாயமாகும்.
கிராமம் முழுவதும் வேட்டையாடப்பட்ட மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடினர். தமிழர்களின் வீடுகள் ஒன்றன்பின் ஒன்றாக எரிக்கப்பட்டன. மொத்தம் 350 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. காலை ஏழு மணியளவில் தொடங்கிய இந்த வன்முறை மதியம் வரை தொடர்ந்தது. அந்த நாளில் திராய்க்கேணி முழுவதும் மரணத்தின் ஓலமே கேட்டது.
உயிர் தப்பிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே அவர்கள் மீண்டும் தங்கள் கிராமத்திற்குத் திரும்ப முடிந்தது.
நீதிக்கான போராட்டம்
திராய்க்கேணி இனப்படுகொலைக்கு நீதி கோரி மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். அந்தக் குரல்களில் முன்னணியில் நின்ற திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி, 1997ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
நீதியை வேண்டிய குரல்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலின் இன்னொரு சாட்சியாக அவரது மரணம் அமைந்தது.
2003 அக்டோபர் 12ஆம் நாள், திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் வளாகத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், குழி ஒன்றிலிருந்து மனித எச்சங்களைக் கண்டுபிடித்தனர். அவை 1990 படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எச்சங்களாக இருக்கலாம் என்று மக்கள் தெரிவித்தனர்.
முழுமையான நீதித் தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். ஆனால் அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை. காலம் கடந்து சென்றதோடு, அந்த எச்சங்களும், அவை சுமந்த சாட்சியங்களும் மறைக்கப்பட்டன. செம்மணியில் இன்று உலகம் காணும் உண்மைகள், திராய்க்கேணியில் அன்றே மண்ணுக்குள் புதைக்கப்பட்டன என்பதும் நினைவில் துருத்துகிறது.
இனப்படுகொலையின் பின்னரான போர்
இந்தப் படுகொலையின் விளைவாக சுமார் நாற்பது பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். ஒரு நாளில் நிகழ்ந்த வன்முறை, பல குடும்பங்களின் வாழ்நாளையே மாற்றியமைத்தது. இதுவே ஒரு இனப்படுகொலையின் பின்னராக நிகழ்கிற போராகும்.
அத்துடன் திராய்க்கேணி மக்களின் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதாகவும், அவர்களது இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் இன்றும் அங்கு தொடர்கிறது.1990ஆம் ஆண்டில் மக்களை அழித்த அரசியல், இன்று நிலங்களை மாற்றியமைக்கும் அரசியலாக நீள்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
திராய்க்கேணி இனப்படுகொலையில் மண்ணில் சிந்தப்பட்ட குருதி இன்னும் உலகின் நீதிமன்றின் கதவுகளை எட்டவில்லை. அந்தக் கிராமத்தின் எரிக்கப்பட்ட வீடுகள் இன்னும் வரலாற்றில் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.
அந்தக் கிராமத்தின் குழந்தைகள் சுமந்த பயம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. ஒரு இனப்படுகொலைக்கு நினைவஞ்சலியை மக்கள் செலுத்துவது என்பது, அப் படுகொலைக்கு நீதியைக் கோருகின்ற போராட்டமாகும்.
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை (2006): 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 08 August, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.