சிறிலங்காவை பணயக் கைதியாக்க முயற்சி
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அரசை பணயக் கைதி ஆக்குவதற்கு விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிடுவதற்கு தயாராகவே உள்ளனர். அது நடக்க வேண்டுமானால் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சிறிலங்கா டயஸ்போரா என்பதற்குள் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இனத்தவர்களும் உள்ளனர்.
இந்த அரசின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஊழல் ஆட்சியால் எவரும் முன்வர மாட்டார்கள் என்பதையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
இந்த அரசு மீது நம்பிக்கையின்மையால் முதலிட எவரும் முன்வர விரும்புவதில்லை. சாதாரணமாகக் கூட பணம் அனுப்ப மாட்டார்கள்.
பணயக் கைதியாக்க முயற்சி
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார். அரசை பணயக் கைதியாகப் பயன்படுத்துவதற்கு அவர் முற்படுகின்றார். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கக் கூடாது.
பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் அரசியல் காரணிகளை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நிதிக்காக அரசு அடிபணிந்து விடக்கூடாது” என்றார்.