ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு
தமிழகம் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஸ்ரீலங்கா கடற்படை மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 28ம் திகதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது அங்கு வந்த ஸ்ரீலங்கா கடற்படை,எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி,அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதில் படுகாயமடைந்த கலைச்செல்வன் என்ற மீனவருக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே முருகானந்தம் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.