மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்..! இராணுவத்தை களமிறக்கும் அவுஸ்திரேலியா
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ஏவுகணைகளை அனுப்பவுள்ளதாகவும் மத்திய கிழக்கிற்கு இராணுவக் கண்காணிப்பு விமானம் ஒன்றை நிலைநிறுத்தவுள்ளதாகவும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரானுக்குள் தரைவழிப் படைகளை அனுப்பப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் தூண்டப்படாத தாக்குதல்களில் இருந்து வளைகுடா நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவுஸ்திரேலியாவின் இந்த இராணுவ ஆதரவு உதவும் எனத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியா இதில் ஒரு முக்கிய தரப்பு அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.
கட்டுப்பாட்டு அமைப்பு
மேலும் தெரிவித்த அவர், “எங்கள் தலையீடு முற்றிலும் தற்காப்பு சார்ந்தது.
இப்பிராந்தியத்தில் உள்ள அவுஸ்திரேலியர்களையும் எமது நண்பர்களான ஐக்கிய அரபு அமீரகத்தையும் பாதுகாப்பதே இதன் நோக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், வளைகுடா நாடுகளின் வான்பரப்பைப் பாதுகாப்பதற்காக, போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட E-7A வெட்ஜெடெயில் (E-7A Wedgetail) வான்வழி ஆரம்ப எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானத்தை ஆரம்பகட்டமாக நான்கு வாரங்களுக்கு அவுஸ்திரேலியா நிலைநிறுத்தும் என்று அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
இயற்கை எரிவாயு
ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேம்பட்ட நடுத்தர தூர வான்-க்கு-வான் ஏவுகணைகள் (Advanced medium-range air-to-air missiles) வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல் தீவிரமடைந்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் பாதையான ஹார்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 11 நாட்களுக்கு முன்பு போர் தொடங்கியபோது சுமார் 115,000 அவுஸ்திரேலியர்கள் மத்திய கிழக்கில் இருந்தனர்.
வளைகுடா நகரங்கள் மீது ஈரான் குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து தற்போது வரை 2,600 அவுஸ்திரேலியர்கள் வர்த்தக விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |