மாணவர்களுக்கு புலமைப் பரிசில் மற்றும் பணப் பரிசுகள் - வேலைத்திட்டம் ஆரம்பம்
அதிபர் புலமைப்பரிசில் வழங்கல் - 2023 நிகழ்வு நேற்று (03) அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.
அதிபரின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தரப் பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை அதிபர் நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன.
சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள்
அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்ற 3,000 மாணவ மாணவியருக்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, இதற்காக நாடு முழுவதிலுமுள்ள 100 வலயக் கல்வி அலுவலகங்களை உள்ளடக்கியதாக வலயமொன்றிற்கு 30 என்ற அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புலமைப்பரிசில் வழங்கலின் அடையாள ரீதியாக, மேல்மாகாணத்தின் 11 கல்வி வலயங்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 110 மாணவர்களுக்கு அதிபரினால் புலமைப்பிரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் கீழ் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு க.பொ.த உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை நிறைவு செய்யும் இரு வருட காலப்பகுதிக்கு மாதாந்தம் 5000.00 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதோடு அதற்காக 360 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்படி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு இணையாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பாடசாலைப் பைகள், அப்பியாச கொப்பிகள், குடை, கடிகாரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பெறுமதியான பரிசில்களும் புலமைப் பரிசில் பெற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
புலமைப் பரிசில் பெற்றுக்கொண்ட ஏனைய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் என்பவற்றை அடுத்த இரு வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
