பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்த்தப்படாது: வெளியான அறிவிப்பு
தற்போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்த்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ரத்தொலுஹமவிலுள்ள சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்திப் பொருட்கள்
இந்தநிலையில், டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிசக்தி மூலங்களைப் பெறுவதில் நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், தற்போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “இலங்கையிலுள்ள பேக்கரிகளில் சுமார் 25 சதவீதமானவை எரிவாயுவையும், 25 சதவீதம் முதல் 30 சதவீதமானவை டீசல் மற்றும் மண்ணெண்ணெயையும், எஞ்சியவை விறகு மற்றும் ஏனைய மாற்று எரிபொருட்களையும் பயன்படுத்துகின்றன.
பல பேக்கரிகள் வழமையாக டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய்யைக் கொள்கலன்களில் கொண்டு செல்வது வழக்கம்.
விசேட அனுமதி
எனினும், கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடை காரணமாகப் பேக்கரி உரிமையாளர்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
அத்தோடு, நாடு முழுவதும் நிலவும் மின்சாரத் தடைகளும் பேக்கரி உற்பத்திகளைப் பெரிதும் பாதித்துள்ளன.

இந்தநிலையில், எரிவாயு விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் விலை உயர்வு காரணமாகத் தொழில் நடவடிக்கைகளைச் சீராகப் பேணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் தொழிற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல, பேக்கரி உரிமையாளர்களுக்கு விசேட அனுமதி முறையின் கீழ் கொள்கலன்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |