கேப்பாபுலவு மக்கள் நிலத்திற்காகப் பத்தாண்டுகளாகவா போராடுகின்றனர்...
ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு என்பது ஒரு கிராமத்தின் பெயராக மாத்திரமின்றி, தமிழர் தாயகத்தில் நில உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மிக நீண்டகால மக்கள் போராட்டத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது.
போர் முடிந்து பதினேழு ஆண்டுகள் கடந்தும், மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைய முடியாமல் இராணுவ முகாம்களின் வேலிகளுக்கு வெளியே நின்று நீதி கேட்கும் துயரமான காட்சியை ஈழம் இன்னமும் சுமக்கிறது எகன்பதற்கு கேப்பாபுலவு ஒரு சாட்சி.
அந்தப் போராட்டம் இப்போது பத்தாண்டுகளைத் தாண்டியிருக்கிறது. ஒரு தலைமுறையின் குழந்தைகள் தமது முன்னோரின் நிலங்களை கதைகளில் மட்டுமே கேட்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பது ஈழ நிலத்தின் பெருந்துயரம்.
கேப்பாபுலவின் கதை
நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் நிலத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று யுத்தம் முடிந்த பின்னர் வன்னி மாவட்ட படைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஒருமுறை குறிப்பிட்டார்.
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடங்களை மறந்துவிட வேண்டும் என்றும் சொன்னார். இதுதான் போரை நடத்தியவர்களின் நிலம்மீதான ஆக்கிரமிப்பு மனநிலை. ஆனால் இந்தச் சொற்கள் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை மிகவும் உக்கிரமாக்கியதே தவிர, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடவில்லை.
பாரிய அரச அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நெடிய போராட்டத்தை கேப்பாபுலவு மக்கள் நடாத்தி வந்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் ஆகப்போகின்றன என்றால், கேப்பாபுலவை அந்த மக்கள் இழந்தும் அதற்காகப் போராடியும் பதினேழு ஆண்டுகள்தான்.
எம்மை சுட்டுக்கொன்றாலும் நிலத்திற்கான போராட்டத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்று இந்த மக்கள் தொடர் எதிர்ப்புப் போராட்டத்தை பத்தாண்டுகளாக முன்னெடுக்கின்றனர்.
2017இல், கேப்பாபுலவின் பிலக்குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாக சுமார் எண்பது ஏக்கர் நிலப் பகுதியை இந்த மக்கள் மீட்டிருந்தனர். 2017ஆம் ஆண்டு தை மாத்தில் இந்த மக்கள் தமது போராட்டத்தை பிலக்குடியிருப்பில் ஆரம்பித்தனர்.
பிலக்குடியிருப்பு விமான படை முகாமின் முன்பாக தகரக் கொட்டில்களில் இருந்து பனியிலும் வெயிலிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த மக்கள் நடத்திய போராட்டம் அவர்களின் பூர்வீக நிலத்தை வெல்ல வைத்தது.
தொடர் போராட்டம்
பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக அவர்கள் வீதியோரத்தில் அமர்ந்தனர். வெயிலும் மழையும் அவர்களைத் தடுக்கவில்லை. பல அரசுகள் மாறின. பல அமைச்சர்கள் வாக்குறுதிகள் அளித்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் நிலம் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. அதனால் இந்தப் போராட்டம் மக்களின் வாழ்வுரிமை வரலாறாக மாறியிருக்கிறது. கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது.
மாற்றுக் காணி வேண்டாம். நஷ்டஈடு வேண்டாம். எமது முன்னோர்கள் வாழ்ந்த நிலம், தமது குடும்பத்தின் சொத்து, தமது நினைவுகளின் வாழ்நிலம் மட்டுமே வேண்டும் என்பதுதான் அம் மக்களின் பெருங்குரல்.
அந் நிலம் மக்களின் நிலம். கிணறுகளில் நீர் எடுத்தும் தம் ஊரின் ஆலயங்களில் வழிபட்டும் தம் உறவினர்கள் வாழ்ந்தும் விதைந்துமான அந் நிலம் அவர்களின் சொந்த நிலம். எனவே அந்த நிலத்திற்கு மாற்றாக வேறு எதையும் ஏற்க முடியாது என்பதே மக்களின் உறுதியான குரல்.
2017இல் தொடங்கிய இம் மக்களின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. சமீபத்திலும் பாரியபோராட்டம் நடந்தது. கடந்த ஜூன் 05ஆம் நாளன்று கேப்பாபுலவு மக்கள் இராணுவ முகாமின் முன்பாக மீண்டும் ஒன்றுகூடி போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
பல நாட்களாக அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
நிலமின்றி வாழும் துயரம்
இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மக்களின் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அண்மைய போராட்டத்தில் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் பெண்களும் முதியவர்களும் அதிகளவில் பங்கேற்று, தமது நிலமின்றி வாழும் வாழ்க்கையின் துயரத்தை மீண்டும் உலகிற்கு எடுத்துரைத்தனர். இந்தப் போராட்டம் சமூக ஊடகங்களிலும் பரவலாகக் கவனம் பெற்றது.
இன்றும் கேப்பாபுலவில் வாழும் குடும்பங்களின் நிலை மிகவும் துயரமாகவே நீள்கிறது. தமது சொந்த விவசாய நிலங்களை இழந்ததால் பல குடும்பங்கள் கூலித்தொழிலையே நம்பியிருக்கின்றன. விவசாயம் செய்து வாழ்ந்த குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.
இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அலைகின்றனர். பெண்கள் குடும்பத்தை நடத்த பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வயதான பெற்றோர்கள் தாங்கள் பிறந்த மண்ணைப் பார்த்தே இறக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றனர். பலர் இறந்தும் போயுள்ளனர்.
பல குழந்தைகள் தமது பெற்றோர் கூறும் கதைகளில்தான் தங்கள் சொந்த நிலத்தை அறிந்திருக்கின்றனர். ஒரு சமூகத்தின் பொருளாதாரமும், பண்பாடும், நினைவுகளும், மரபும் நிலத்துடன் இணைந்திருக்கின்றன என்பதை கேப்பாபுலவு மக்களின் வாழ்க்கை நினைவூட்டுகிறது.
வாய்ச் சொல்லில் நல்லிணக்கம்
ஒரு புறம் மக்கள் நிலமின்றி தவிக்கும்போது, மறுபுறம் அந்த நிலங்கள் இராணுவப் பயன்பாட்டில் இருப்பதைப் பார்க்கும்போது மக்களின் மனவேதனையை மேலும் பெருகுகிறது.
போருக்குப் பிறகு நல்லிணக்கம் பற்றி அரசுகள் தொடர்ந்து பேசினாலும், நல்லிணக்கத்தின் அடிப்படை நிபந்தனையான நீதி இன்னும் வழங்கப்படவில்லை என்பதே கேப்பாபுலவு மக்களின் விடயத்தில் தெளிவாகத் தெரிகின்ற செய்தியாகும்.
நிலம் மீளக் கிடைக்காமல் நல்லிணக்கமும் நம்பிக்கையும் உருவாக முடியாது என்பதை இந்தப் போராட்டம் தெளிவாகச் சுட்டுகிறது. அத்துடன் கேப்பாபுலவு மாத்திரன்றி, வலி வடக்கு, மயிலிட்டி, வட்டுவாகல் போன்ற பகுதிகளிலும் மக்கள் தமது நிலங்களை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த எல்லாப் போராட்டங்களும் ஒரே உண்மையைத்தான் சொல்கின்றன. நிலம் என்பது வெறும் சொத்தல்ல, அது வாழ்வுரிமை. உண்மையில் நிலமென்பது அடையாளமாக, வரலாறாக நினைவாக, எதிர்காலமாக நம் வாழ்வின் எல்லாமுமாக உயிர்பிணைத்து நிற்கின்றது.
நிலத்தை ஆக்கிரமிப்பது மனித உரிமை மீறல்
ஒரு ஜனநாயக அரசின் கடமை, மக்களின் சொத்துரிமையை மதிப்பதும், நீதியை நிலைநிறுத்துவதுமே எனப்படுகிறது. ஆனால் போர் முடிந்து இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னரும் பொதுமக்களின் காணிகளை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விசயம்.
நில உரிமை என்பது அடிப்படை மனித உரிமை. அதை மறுப்பது, போரின் காயங்களை தொடர்ந்து உயிரோடு வைத்திருக்கிற செயல். எனவே கேப்பாபுலவு மக்களின் பத்தாண்டு கால அமைதியான போராட்டத்திற்கு இலங்கை அரசு இனியும் தீர்வு வழங்காமல் இருக்க இயலாது.
மீதமுள்ள அனைத்து காணிகளையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக உரிமையாளர்களாக மக்களிடம் கையளிக்க வேண்டும். தமது மண்ணில் மீண்டும் வீடு கட்டி, விவசாயம் செய்து, தமது குழந்தைகளுடன் வாழும் கனவும் உரிமையும் கேப்பாபுலவு மக்களுக்கு கிடைத்தாக வேண்டும்.
தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கிய சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று உறுதி பூண்டு போராடுகிற கேப்பாபுலவு மக்களுக்கு விரைவில் தீர்வை வழங்க வேண்டும்.
எங்கள் தேசத்தில் இன்னமும் மக்கள் நிலத்திற்காகப் போராடுகிறார்கள். எங்கள் தேசத்தின் உறவுகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். எங்கள் தேசத்தின் உரிமைகளுக்காக இன்னமும் போராடுகிறோம். ஆட்சிகள் பல மாறி, ஜனாதிபதிகள் பலர் மாறிய பின்னரும் ஈழத் தமிழர்களின் நிலைதான் இன்னமும் மாறாமல் இருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |