ஆதாய நோக்க அரசியல் செய்யும் சஜித்தின் திட்டங்கள்! கடுமையாக விமர்சித்த வட்டகல
ராஜபக்சர்களின் குடியுரிமை அந்தஸ்த்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் இன்று அவர்களுடனையே கூட்டணியமைக்க முயற்சிப்பது வேடிக்கையான அரசியல் கொள்கையை வெளிப்படுத்துகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல விமர்சித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருளுக்கும் எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சியினர் தான் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
பாதாளக்குழுக்களுடன் தொடர்பு
பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. பாதாளக்குழுக்களுடன் கொண்டுள்ள தொடர்பு விசாரணைகளில் வெளிவரும் என்று எதிர்க்கட்சியினர் தற்போது அச்சமடைந்துள்ளார்கள்.

போதைப்பொருளுக்கும் எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை எவ்வழியிலாவது நிறுத்த வேண்டும் என்றே முயற்சிக்கிறார்கள். அதற்காக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அவர்களின் குடியுரிமை அந்தஸ்த்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அவர்களுடன் கூட்டணியமைக்க முயற்சிப்பது அவரது அரசியல் கொள்கையை வெளிப்படுத்துகிறது.
தேவைக்கு ஏற்ப அரசியல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை எதிர்கட்சித் தலைவர் திருத்திக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் எதற்காக கூட்டணியமைத்துள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
ஊழல் மோசடியில் ஒருவர் சிறைச் செல்லும் போது வெளியில் இருந்து அவருக்காக குரல் கொடுப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள்.இதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது"என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |