நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம் : எதிர்தரப்பு எம்.பியின் அறிவிப்பு
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்த முன்மொழிவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட போது அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்படாத பின்னணியில், அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் கடுமையான பிரச்சினை உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தரணிகள் சங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், "இலங்கையின் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு பிரதம நீதியரசர் கோரவில்லை. உயர்நீதிமன்ற நீதியரசர்களோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களோ கோரிக்கை விடுக்கவில்லை.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரவில்லை. அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அதேபோல், நாடாளுமன்றத்தில் இதுவரை எவரும் இவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான அடிப்படை என்ன என்பதை முன்வைக்கவில்லை. நாடாளுமன்றத்தின் எந்தவொரு குழுவிலும் இந்த யோசனை விவாதிக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடு
அப்படியானால், யார் இவ்வாறானதொரு முன்மொழிவைக் கொண்டு வருகிறார்கள், யாரும் இல்லை. அதாவது இதன் பின்னணியில் மறைமுக நோக்கம் உள்ளது. தனிப்பட்ட மட்டத்திலான குழுவொன்றின் ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைவு எமக்குக் கிடைத்துள்ளது.

அரசாங்கம் நிச்சயமாக இதனைச் செய்யும். நீதிமன்றத்தின் அதிகார சமநிலையை தங்களது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்காகவே இதனைச் செய்கிறார்கள் என்ற விடயத்தை நாம் இப்போது உறுதியாக அறிவோம்.
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. எனவே இதில் பெரும் மர்மம் நிலவுகிறது." என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |