தமிழர்களை ஒடுக்கிய வன்முறை அரக்கன் இன்று சிங்கள தேசத்தையே பலிகேட்கிறானா!
ஈழத்தமிழினத்தின் விடுதலை வரலாறும், தாயகக் கோட்பாடும் வெற்று அரசியல் கோரிக்கைகளால் மட்டும் உருவானதல்ல. அது இந்த மண்ணில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தத்தாலும், மனவெளியெங்கும் வியாபித்த வடுக்களாலும் செதுக்கப்பட்டவை.
1983 ம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரச பாதுகாப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்ட கொடூரமும், 2000ஆம் ஆண்டில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர் மீது ஏவப்பட்ட கொலைவெறித் தாக்குதலும் ஈழத்தமிழர் நெஞ்சில் இன்னும் ஆறாத வடுக்களாகவே தேங்கிக்கிடக்கின்றன.
அன்று இந்த மண்ணில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேச அரங்கில் இன்னும் நீதி கிடைக்காத சூழலில், சிறிலங்காவின் சிங்கள தேசத்தின் உள்ளே நிகழும் சமகாலச் சம்பவங்கள் ஒரு புதிய மூலோபாயப் பாடத்தைத் தந்து கொண்டிருக்கின்றன.
அண்மையில் நீர்கொழும்பில் அரங்கேறிய வன்முறைச் சம்பவம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, அது சிறிலங்காவின் சிங்கள பேரினவாதம் தனக்குத்தானே தோண்டிக் கொண்டிருக்கும் குழி என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
அன்று சிங்கள பேரினவாதம் கொண்டாடிய படுகொலைகளின் சாபக்கேடுதான் இன்று நிலைமாறி நிற்கிறது .
அன்று வெலிக்கடையிலும், பிந்துனுவெவவிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதைச் சிங்கள பௌத்த பேரினவாத தேசம் ஒரு வெற்றிக் கொண்டாட்டமாகவே மாற்றிப் பார்த்தது. அன்றைய கொடூரமான கொலையாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை மாறாக, தமிழர்களைக் கொன்றொழிப்பது ஶ்ரீலங்காவின் சிங்கள தேசபக்தியாகச் சித்திரிக்கப்பட்டு, அவர்கள் அரசினாலேயே பாதுகாக்கப்பட்டார்கள்.
உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தத் தீவில் நீதியில்லை என்பது சிங்கள சட்டப் புத்தகங்களால் மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நியதியாகும் .
ஆனால், அன்று தமிழினத்திற்கு எதிராக ஏவிவிடப்பட்ட அதே காடையர் கலாச்சாரமும், சட்டம் ஒழுங்கற்ற போக்கும் இன்று சிங்கள தேசத்திற்குள்ளேயே, அதன் சொந்த மக்களுக்குள்ளேயே வெடித்துக் கிளம்பத் தொடங்கியுள்ளன.
நீர்கொழும்புச் சம்பவம் உணர்த்தும் காலத்தின் உண்மை எப்படியானதென்றால் உண்மை வன்முறையின் உலகளாவிய விதி/ நீர்கொழும்பில் அண்மையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தை ஒரு சாதாரணக் குற்றவியல் செய்தியாகக் கடந்துபோக முடியாத ஒன்றாகும் .
ஒரு அரசு தனது குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவும், ஒரு தேசிய இனத்தை ஒடுக்குவதற்காகவும் வன்முறையைத் தனது பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தும்போது, அந்த வன்முறைக் கலாச்சாரம் ஒட்டுமொத்த சமூகத்தின் மரபணுவிலேயே ஊறிவிடுகிறது.
இங்கு வரலாற்று விதி என்னவென்றால் தமிழர்களை ஒடுக்குவதற்காக இராணுவமயமாக்கப்பட்ட, காடையர்மயமாக்கப்பட்ட ஒரு பேரினவாதச் சமூகம், வெளியில் சண்டையிட தமது எதிரிகள் (தமிழர்கள் ) பலவீனமாக்கப்பட்டதாக நினைக்கும் சூழலில், தனக்குள்ளேயே மோதிக்கொள்ளத் தொடங்கும்.
அன்று தமிழர்களின் இரத்தத்தைக் குடித்த வன்முறை அரக்கன், இன்று சிங்கள சமூகத்தின் உள்முரண்பாடுகள் காரணமாக அவர்களின் சொந்தப் பிள்ளைகளையே பலிகேட்கத் தொடங்கியுள்ளான். இப்போதைய நீர்கொழும்புச் சம்பவங்கள் காட்டுவது என்னவென்றால் சிங்கள தேசத்தின் உள்முகக் கட்டமைப்பின் சிதைவையே ஆகும்.
காலத்தின் சுழற்சியும் தமிழர்களின் மூலோபாய நகர்வும்
இன்று சிங்கள தேசத்தில் நிகழும் இந்தத் தற்போதைய சமூகச் சிதைவுகளை, ஈழத்தமிழர்கள் உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல், தீர்க்கமான மூலோபாயக் கோணத்தில் உற்றுநோக்க வேண்டியது அவசியமாகும் .
1. கட்டமைப்பின் வீழ்ச்சி
தமிழர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இலஞ்ச ஊழல், சட்டமின்மை, மற்றும் அதீத இராணுவக் கட்டமைப்பு என்பன இன்று ஒட்டுமொத்த இலங்கையின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பையே சீரழித்துள்ளது.
இன்று நீர்கொழும்பு சிறையில் வெடிக்கும் உள்நாட்டு வன்முறைகள், அந்நாட்டின் பொலிஸ் மற்றும் நீதித்துறையின் மீதான மக்களின் முழுமையான நம்பிக்கையீனத்தையே வெளிப்படுத்துகின்றன.
2. வரலாற்று நியதி
அன்று தமிழர்களின் இரத்தம் சிந்தியபோது கொண்டாடிய பேரினவாதச் சமூகம், இன்று தங்களுக்குள் மோதிக்கொண்டு தெருக்களில் இரத்தம் சிந்துவதைப் பார்க்கும்போது, அது "காலத்தின் கணக்கு" என்பதைத் தவிர வேறில்லை. தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்த ஒரு தேசம், தனக்குள்ளும் நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பதைச் சிங்கள மக்கள் இன்று நடைமுறையில் அனுபவித்து வருகிறார்கள் என்பதே உண்மையாகும் .
3. சர்வதேசத்திற்கான வலுவான செய்தி
சிங்கள தேசம் தனக்குள்ளேயே சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடியாத ஒரு தோல்வியடைந்த நாடாக மாறிவருவதை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஈழத்தமிழர்கள் தமக்கான நீதியை இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் ஒருபோதும் பெறமுடியாது என்ற தங்களின் நீண்டகால வாதத்தை இந்தச் சம்பவங்களின் சான்றுகளோடு சர்வதேச அரங்கில் மேலும் வலுவாக முன்வைக்க முடியும். இது காலம் தந்த மிகச்சிறந்த உதாரணமாகும் .
எனவேதான் ஈழத்தமிழர்களின் காயாத இரத்தமும் ஓயாத போராட்டமும்
வெலிக்கடையிலும் பிந்துனுவெவவிலும் சிந்திய தமிழ் இளையோரின் இரத்தம் இன்னும் காயவில்லை. அதற்கான சர்வதேச நீதியை நோக்கிய ஈழத்தமிழரின் ஏக்கம் இன்னும் ஓயவில்லை. ஆனால், "அநீதியின் அடித்தளத்தில் கட்டப்படும் எந்தவொரு பேரரசும் நிம்மதியாக வாழ முடியாது" என்ற இயற்கையின் நீதி இன்று சிங்கள தேசத்தின் தெருக்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
நீர்கொழும்புச் சம்பவம் தமிழர்களுக்கான நீதியின் தேவையை இன்னும் உரக்கப் பேச வைக்கிறது.
அநீதி இழைத்த தேசம் காலத்தின் போக்கில் எவ்வாறு தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்கிறது என்பதற்கான வரலாற்றுப் பாடத்தை உணரும் தருணமிது . ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டம் என்பது கடந்த காலத்தின் அழுகைக்கான குரல் அல்ல அது எதிர்காலத்திற்கான இறையாண்மையையும் தன்னாட்சியையும் நோக்கிய தீர்க்கமான அரசியலின் பயணமாகும.
காலம் தந்திருக்கும் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தமிழ்தேசத்தின் அரசியலாளர்களும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் பன்னாடுகளினதும் படலையைத்தட்டி சொல்லவேண்டிய காலமிது.
| பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 07 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |