வடக்கு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையை முடக்க சதி: வெளிச்சத்துக்கு வரும் சர்ச்சை!!
அண்மையில் இடம்பெற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஆறு உதைபந்தாட்ட லீக்குகள் மீது தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆறு லீக்குகளில் வடக்கில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் மாந்தை மேற்கு போன்ற லீக்குகளும் கிழக்கில் கல்குடாவும் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் என்பவர் தனக்கு ஆதரவு இல்லாத கழகங்களை பழிவாங்கும் விதமாக இந்த தடைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் உறுப்பினரும் யாழ்.பல்கலை உடற்கல்வி விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளந்திரையன் ஐபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
முறைகேடான நிர்வாக தேர்வின் முடிவை நிறுத்தி வைக்குமாறு தன்னால் தொடரப்பட்ட வழக்கை காரணம் காட்டி இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் எனினும் நீதிமன்ற வழக்கு இருக்கின்ற போது நடத்தப்பட்டு வந்த உதைபந்தாட்ட லீக் நீதிமன்ற அனுமதியின்றி நிறுத்தப்பட்டது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதற்கும் குறித்த தடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இது வெறுமனே இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வரின் தனிப்பட்ட வன்மம் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இது ஒரு தேவையற்ற விடயம் எனவும் இளந்திரையன் தெரிவித்தார்.
மேலும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளம் அதிகாரபோட்டிகளை நோக்கி செயற்படுவதாகவும் பாரியளவிலான நிதி மோசடிகளை கையாள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, இந்த தடை வடக்கு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையினை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சி எனவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
