விடுதலையாடிகளின் ஈழக்கனவில் ஒரு விரிசல் ஏற்படக்காரணமாயிருந்த சமாதான ஒப்பந்தம் 24 ஆண்டுகள்!
மிகநீண்ட வரலாற்று முரண் கொண்ட இனச் சமத்துவ பாகுபாட்டு நிலையில் ஒரு பெரும் வரலாற்றுக்கறையை சுமந்து நிற்கும் ஶ்ரீலங்காவின் வரலாற்றில் தனது வரலாற்று தவறுகளை மறைக்க அல்லது சர்வதேச சமூகத்திடம் தனது ஒரு போலி முகமூடியை அணிந்து கொண்டு ஒரு சமாதான முயற்சி என்ற தந்திரோபாய நகர்வை கையாண்டார் அன்றைய ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இது நடந்து முடிந்து 24 ஆண்டுகள் கடந்து ஒப்பந்த்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக ஒரு கட்டாய மௌனத்திற்குட்படுத்தப்பட்ட நிலையில் அந்த சமாதான உடன்படிக்கை தொடர்பிலும் அதே நேரத்தில் விடுதலைப்புலிகளை தமிழர்களுக்கான ஏக பிரதிநிகளாக ஏற்றுக்கொண்டு ஒரு ஒப்பந்த்தில் கையெழுத்திட்ட வரலாற்று நிகழ்வையும் நினைவுகூருவதோடு அதன் பின்னான நகர்வுகளிலும் ஈழப்போராட்டத்திற்கான நியாயமான அபிலாசைகளை இன்று வரை புரிந்துகொள்ளத்தலைப்படாத ஶ்ரீலங்காவின் சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலை தொடர்பிலும் பேசிக்கொள்வதும் ஒரு காலக்கட்டாயம் என்ற அடிப்படையில் இந்த கட்டுரையை வரையவேண்டியதாகிறது.
ஶ்ரீலங்கா அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 அன்று நோர்வே நாட்டின் அனுசரணையுடன் அதிகாரப்பூர்வ யுத்த நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire Agreement – CFA) கையெழுத்தானது.
ஒரு நீண்ட அடக்குமுறைக்குட்பட்ட தமிழ்மக்களுக்கும் 80 துகளில் இருந்து தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த புலிகள் மற்றும் ஶ்ரீலங்க இராணுவத்தரப்புக்கு ஒரு இடைக்கால ஓய்வுக்கான காலப்பகுதியாக இந்த ஒப்பந்தம் தேவைப்பட்டது.
உண்மையில் ஒரு நாடு என்று அறியப்பட்ட நிலப்பரப்பிற்குள் வாழ்ந்த இருவேறு இனக்கூட்டங்களுக்கிடையிலான உரிமைப்பகிர்வு தொடர்பான முரண்பாட்டின் உச்சத்தில் ஒரு சமாதான உடன்படிக்கையின் தேவை என்ன எனபதற்கு அப்பால் ஏன் இப்படியான ஒரு முரண்நிலை உறுப்பெற்றது என்பதிலையே முதலில் கவனம் செலுத்தவேண்டும்.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலைபெற்ற இலங்கை மீளவும் சிங்கள ஏகாதிபத்தியத்திற்குள் தன்னை விழுத்திக்கொண்டது . 1621 ல் போத்துக்கேயரால் ஈழத்தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட இறைமை மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படாமல் 1948 ல் பிரித்தானியரால் சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதே முதல் காரணம்.
குறிப்பாக தமிழர்களில் செறிந்து வாழ்ந்த ஈழத்தமிழர்களின் பூரவீகத்தாயகத்தின் மீதான குறி ஆங்கிலேயர் காலத்திலையே குடிப்பரம்பல் நகர்வாக 1930 துகளிலையே திருகோணமலை போன்ற தமிழர் பிரதேசங்களில் நிகழ்த்தப்பட்டது. இந்த நிலையிலையே இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு தமிழர்களின் சுதந்திரத்தையும் சிங்களவர்களிடம் வழங்கிவிட்டு சென்றது பிரித்தானிய காலனித்துவம்.
அதன் பின்பு நீறுபூத்த நிலையில் இருந்த இனப்பிரச்சினை கட்டங்கட்டமாக ஈழத்தமிழர்கள் மீது கலவரங்களாக கட்டவிழ்த்து விடப்பட்டது.
இலங்கை அரசியல் மற்றும் சமூக அமைப்பு பெரும்பான்மையானவர்களாக கருதப்பட்ட சிங்கள பௌத்த சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள், மொழி சட்டங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் புறக்கணிப்புகள், மற்றும் சமூக ஆதிக்கம் என தொடர்ந்து 1956 ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்ட மூலம் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகக் குறைத்தல், தமிழ் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தியது. 1970-80 களில் அரசாங்கத்தின் மற்றும் சமூக அமைப்புகளின் நடவடிக்கைகள், ஈழத் தமிழர்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் பாதித்தது.
இந்த நிலையில் ஈழத்தமிழ் இளைஞர்களின் கைகளில் ஆயுதம் திணிக்கப்பட்டு பின்னர் அது ஒரு அரசுக்கு இணையான ஆயுத மோதலாக மாறியது விடுதலைப்புலிகள் தங்களை தனியானதோர் அரசாக நிலைப்படுத்திக்கொண்டார்கள் இதனை ஶ்ரீலங்க அரசும் ஏற்றபடியினாலையே புலிகளோடு ஒரு சமாதன உடன்படிக்கை மேடையில் ஏறியிருந்தது.
குறிப்பாக இந்த மாற்றமானது 2001-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இரு தரப்பும் ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை அறிவித்தன. இதனைத் தொடர்ந்து நோர்வேயின் தீவிர முயற்சியால் முறையான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் உடனடி விளைவாக, 1990-களின் தொடக்கத்திலிருந்து மூடப்பட்டிருந்த ஏ-9 (A-9) நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. இது வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையிலான நேரடித் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தியதுடன், யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை ஓரளவுக்கு மீட்டெடுத்தது எனவும் குறிப்பிட முடியும்.
அதன் பின்னர் இதன் தொடர்ச்சியாக சமாதானப் பேச்சுகள் தாய்லாந்து, ஜப்பான் மற்றும் ஜெர்மனி எனப் பல்வேறு நாடுகளில் தொடர்ந்தன. இதில் 2002 டிசம்பரில் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை மிக முக்கியமானது என இப்போதும் கருதப்படுகிறது.
வரலாற்றில் முதன்முறையாக, விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் "தனிநாடு" என்ற கோரிக்கைக்குப் பதிலாக, "ஒன்றிணைந்த இலங்கைக்குள், தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளில் கூட்டாட்சி (Federal) முறையிலான தன்னாட்சித் தீர்வை"ஆராயச் சம்மதித்தாகவும் கூறப்படும் இந்த தீர்வு முயற்சியே "ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப்படுகிறது. இது சர்வதேச சமூகத்திற்கு ஒரு நேர்மறையான செய்தியை வழங்கியதுடன், இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையில் ஒரு மாற்றத்திற்கான சாத்தியத்தை உருவாக்கியது எனவும் அரசியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆனாலும் இந்த விடயப்பரப்பு தொடர்பில் விடுதலைப்புலிகள் தமது தனிநாட்டுக்கோரிக்கையை கைவிட்டார்களா என்ற கேள்வி எழுகின்ற போது அதன் பேர்ச்சுவார்த்தை மேடை பிரதிநிதிகள் இதனை ஏற்று கையெப்பமிட்டிருந்தாலும் தலைவர் பிரபாகரன் அவர்களால் அது ஏற்றுக்கொள்ளப்படாததால் தொடர்ந்தும் நகரமுடியாமல் போனது.
அதே நேரம் அதனைதொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளின் படி 2003-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் உடனடிப் புனரமைப்பு மற்றும் நிர்வாகத் தேவைகளுக்காக இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை (Interim Self-Governing Authority - ISGA) என்ற திட்டவரைவைப் புலிகள் சமர்ப்பித்தனர்.
இந்த திட்டம் சில முக்கியக் கோரிக்கைகளைக் கொண்டிருந்தது அதாவது வடக்கு-கிழக்கு மாகாணங்களின் நிலம், சட்டம் ஒழுங்கு மற்றும் நிதி மேலாண்மை மீதான தன்னாட்சி அதிகாரம். சர்வதேச உதவிகளை நேரடியாகக் கையாளும் வசதி போன்றன கோரப்பட்டிருந்தது./ இருப்பினும், இந்தத் திட்டம் தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒரு தனிநாட்டிற்கான மறைமுகக் கட்டமைப்பு என ஜே.வி.பி (JVP) மற்றும் ஜாதிக ஹெல உருமய போன்ற சிங்கள கடும்போக்கு கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
அதேபோல அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அரசியல் அதிகாரப் போட்டி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் தடையாக அமைந்ததுபோனது. இதனால் இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையும் அர்த்தமற்றதாகிப்போனதும் இலங்கை வரலாற்று சமாதான முயற்சிகளின் ஒரு கசப்பான நகர்வாக பதிவானது.
இது இப்படியிருக்க இந்த சமாதான உடன்படிக்கை விடுதலைப் புலிகள் அமைப்பைப் பலப்படுத்தியதா அல்லது பலவீனப்படுத்தியதா என்பது இன்று வரையும் அரசியல் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதத்திற்குரிய ஒரு பேசுபொருளாகும்.
இது "இருதலைக் கொள்ளி எறும்பு" போன்ற சூழலை உருவாக்கியது என்றும் குறிப்பிட முடியும் இதையும் தாண்டி இந்த ஒப்பந்தம் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைப் பின்வரும் காரணிகளின் அடிப்படையில் நாம் ஊகித்துக்கொள்ள முடியும்.
சமாதான உடன்படிக்கை புலிகளைப் பலவீனப்படுத்தியதா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே ஓரளவு பொருத்தமான பதிலாக காண முடியும் இதுவே உலகளாவிய பல இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகவும் இருந்து வருகிறது.
இவற்றில் குறிப்பிட்டு சில காரணிகளை அடையாளப்படுத்த வேண்டும் என்றால் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றார். இது புலிகளின் இராணுவப் பலத்திற்குப் பேரிடியாக அமைந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் அவர்களின் பிடியை சற்றுத்தளத்தியது எனலாம்.
அதேபோல சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த சமகாலத்திலையே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் புலிகள் அமைப்பைத் தடை செய்தன. இது அவர்களின் நிதி திரட்டல் மற்றும் சர்வதேச ஆதரவை முடக்கியது.
அதே நேரம் பலராலும் குறிப்பிடப்படும் இன்னொரு காரணம் நீண்டகாலம் போரில் ஈடுபட்டிருந்த போராளிகள், சமாதான காலத்தில் குடும்ப வாழ்க்கையிலும் சாதாரணப் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கியதால், அவர்களின் போர்க்குணம் மற்றும் விடுதலை தொடர்பிலான ஓர்மத்தில் ஒரு தொய்வை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அத்துடன் போர் நிறுத்தக் காலத்தில் அரசுத் தரப்புப் புலனாய்வுப் பிரிவினர்மற்றும் அயல்நாட்டு உளவாளிகள் வியாபாரிகளைப்போல புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி, முக்கியத் தளபதிகள் மற்றும் இலக்குகளைக் கண்டறியும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதே நேரம் புலிகளுக்குச் சாதகமாக இருந்த அம்சங்கள் சிலவும் இந்த ஒப்பந்த்தில் இல்லாமல் இல்லை. சமாதான காலத்தில் வடக்கு-கிழக்கு பகுதிகளில் நிதி , நிர்வாக , நீதிமன்றம் என ஒரு முழுமையான 'நிழல் அரசாங்கத்தை' அவர்கள் வெளிப்படையாக நடத்த முடிந்தது.
அதேபோல உலக நாடுகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடாத்த சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டதன் மூலம், அவர்கள் ஒரு போராட்டக்குழு என்ற நிலையிலிருந்து , ஒரு நிழல் அரசுடைய தரப்பாகச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றனர்.
அதுமாத்திரமல்லாமல் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி தமது தற்காப்பு அரண்களைப் பலப்படுத்தவும் , தேவைகளுக்கேற்ப புதிய போராளிகளை சேர்க்கவும் இந்த ஓய்வுக்காலம் அவர்களுக்குக் சாதகமாக அமைந்தது.
என்றபோதும் உண்மையில் இது யாருக்கு அதிகச் சாதகமானது? என்ற கேள்வி எழுகின்றபோது நீண்டகால நோக்கில் , இது இலங்கை அரசாங்கத்திற்கே அதிகச் சாதகமாக அமைந்தது எனலாம்.
இலங்கை அரசைப்பொறுத்தவரை சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை இதன் மூலம் பெற்றுக்கொண்டது போரினால் வீழ்ச்சியடைந்திருந்த தமது பொருளாதாரத்தை மீட்டெடுத்து புதிய பல ஆயுதக்கொள்வனவுகளைவ மேற்கொண்டதுடன் புலிகளின் உட்பிரிவு மோதல்களை (கருணா பிளவு) தமது முகவர்களூடாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது.
அத்துடன் இந்தக்காலப்பகுதியில் இலங்கையில் இந்தியாவின் தாக்கம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலையீடு அதிகரித்தது இது விடுதலைப் புலிகளைத் தர்மசங்கடமான அரசியல் சூழலுக்குள் அல்லது ஒரு சர்வதேச ராஜதந்திரப்பொறிக்குள் தள்ள முடிந்தது எனலாம்.
இறுதியாக சமாதான ஒப்பந்தம் என்பது இராணுவ ரீதியாகப் புலிகளை ஒரு "மென்மையான போக்கிற்கு" தள்ளியது. ஆனால், இலங்கை அரசு அந்த காலத்தைப் பயன்படுத்தித் தனது இராணுவத்தைப் நவீனப்படுத்தவும் சர்வதேசத் தூதரக உறவுகளைப் பலப்படுத்தவும் செய்தது. இறுதியில், இந்த ஒப்பந்தக் காலத்தில்தான் புலிகளின் உள்வீடு பலவீனமடையத் தொடங்கியது, இதுவே 2009 இல் அவர்களின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணியாகவும் அமைந்தது என்பதே போருக்குப்பிந்திய போரியல் அரசியலாளர்களின் கருத்தாகும்.
எது எப்படி என்றாலும் இன்று 24 ஆண்டுகள் கழித்தும் எந்த வித மாற்றங்களுக்கும் உட்படாத ஶ்ரீலங்காவின் சிங்க பௌத்த பேரினவாத நிலைப்பாடு ஈழத்தமிழர்களிடையே திட்டமிட்ட ஒடுக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்தும் கட்டவிழ்த்துக்கொண்டே இருக்கிறது என்பதும் சமாதான அனுகுமுறைகள் யாவும் வெறும் போலித்தோற்றப்பாடுகள் என்பதையே குறித்து நிற்கிறது.
இதுவே விடுதலையாடிகளின் ஈழக்கனவில் ஒரு விரிசலை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது எனவும் கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |