மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு
மட்டக்களப்பில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமொன்றிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றிற்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலில் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தாக்கல்
இதில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன் மற்றும் ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களைச் சோதனையிட்டுள்ளனர்.
இந்தச் சோதனையின்போது குறித்த உணவகத்தில் உணவு தயாரிப்பதற்காகக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவுப் பொருட்களான கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் கடலை ஆகியவற்றில் பெருமளவிலான வண்டுகள் காணப்பட்டதுடன் உணவகத்தின் கழிவுநீர் முறையான வடிகால் வசதியின்றித் திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தவேந்திரராஜாவினால் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிவான் குறித்த உரிமையாளரைத் தண்டப்பணமாக 70 ஆயிரம் ரூபாவைச் செலுத்துமாறும், உணவகத்தைத் திருத்த வேலைகளைச் செய்து முடிக்கும்வரை தற்காலிகமாக மூடுமாறும் மற்றும் கைப்பற்றப்பட்ட வண்டுகள் நிறைந்த பெருமளவிலான உணவுப் பொருட்களை உடனடியாக அழிக்குமாறும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






