யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு
புதிய இணைப்பு
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி (இல. 1810) முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
மயிலிட்டியில் தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும்.
போராட்டத்தின் பின்னர் மக்களின் இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உரிய துரித நடவடிக்கைகளுக்காக அதனை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பொதுமக்களின் காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலகம் முன்பாக காணி உரிமையாளர்கள் சற்றுமுன்னர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் வாதிகள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டக் களத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - த.பிரதீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்றுடன் (15) 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
இந்நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ நடவடிக்கையினால் தங்களின் பூர்வீக மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இராணுவத்தினரை வெளியேற்றல்
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அகதிகளாகியுள்ள இப்பகுதி மக்களை இன்னமும் அவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்காது, மக்களின் வளமான காணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

இந்தநிலையில், மக்களின் பூர்வீகக் காணிகளில் இருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி, தங்களைச் சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு அறிவித்துள்ளது.
தங்களின் வாழ்வாதார உரிமைக்கான இந்த நியாயமான போராட்டத்துக்கு எவ்வித கட்சிப் பேதங்களுமின்றி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும், அரசியல் தலைமைகளும், பொதுமக்களும் முழுமையான ஆதரவை வழங்கிப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ். மாவட்ட செயலகப் போராட்டத்துக்கு இணையாக, வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலய எல்லையான பலாலி சந்திப் பகுதியிலும் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மற்றுமொரு கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ராகேஸ்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





