தங்கையின் தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த அண்ணன்!
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வேறு மதத்தை சேர்ந்த நபரை காதலித்த காரணத்தால் உடன் பிறந்த அண்ணனே தனது தங்கையின் தலையை வெட்டி எடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பதேபூர் மாவட்டம், மித்வாரா கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் என்ற 22 வயது இளைஞனே தனது தங்கையான 18 வயதான ஆசிபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ...
ஆசிபா என்ற பெண் அந்த கிராமத்தைச் சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரை காதலித்துள்ளார். குடும்பத்தினரின் எதிர்ப்பை தொடர்ந்து காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் தேடிப்பிடித்தனர்.

இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர், ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் தேடிப்பிடித்தனர்.
ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த காவல்துறையினர் சந்த் பாபுவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வேற்று மதத்தவரைக் காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது குறித்து அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே நேற்று (21) வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தினைக் கொண்டு தங்கை ஆசிபாவின் தலையை வெட்டியுள்ளார்.
காவல் நிலையத்தில் சரணடைந்தார்

இந்நிலையில் வெட்டி எடுத்த ஆசிபாவின் தலையுடன் வீட்டில் இருந்து நடந்தே காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இதையடுத்து, ரியாசை கைதுசெய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ஆசிபாவின் தலையைக் கைப்பற்றினர்.
அத்துடன் வீட்டில் இருந்த ஆசிபாவின் தலையில்லா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதியினை உருவாக்கியுள்ளது.