நடத்துனரை உதைத்து ஓடும் பேருந்திலிருந்து வெளியில் வீசிய பெண்
நடத்துனரை தாக்கிய பெண் பயணி
இன்று மாலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் நடத்துனரை உதைத்ததில் அவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்தில் கிரிபத்கொடையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏறி, பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துனர் தெரிவித்தபோது, அவரை கையால் தாக்கி உதைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
இந்த சம்பவத்தை அடுத்து, பேருந்தில் இருந்த சிலர் அந்த பெண்ணை பிடித்து கடவத்தை காவல்துறையில் ஒப்படைத்தனர். குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், 34 வயதுடைய அவர் பல வருடங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.
பெண்ணும் நடத்துனரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண் மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படவுள்ளார்.
பிரதான காவல்துறை பரிசோதகர் மொஹான் டி சில்வாவின் பணிப்புரையின் பேரில் கடவத்தை காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
