மகிந்தவின் மகனுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகன் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் (Daisy Forrest) ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று (30) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, அரச தரப்பு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி உதார கருணாதிலக, வழக்கு தொடர்பான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பணமோசடி தடுப்புச் சட்டம்
பிரதிவாதிகள் தரப்பில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், விசாரணை தயாரிப்புக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் சாட்சி அறிக்கைகளின் பட்டியலை சமர்ப்பித்ததுடன் நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக அரச தரப்பு அவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, கோரப்பட்ட ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை பிரதிவாதிக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் சட்டவிரோதமாக சுமார் 73 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
