முன்னாள் அரசதலைவர் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன கூறிய சர்ச்சைக்குரிய கருத்து - சிஐடிக்கு கோரிக்கை விடுத்துள்ள கத்தோலிக்க மத குருமார்
முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga)கூறியமை தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கத்தோலிக்க மத குருமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தமை தொடர்பாக உடனடியாக விசாரணையை நடத்துமாறு கொழும்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்து கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயத்தின் மத குருமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு பேராயத்தின் தகவல் தொடர்பு பிரிவின் பணிப்பாளர் ஜூட் கிறிஸ்சாந்த, கொழும்பு செத்சரண நிறுவனத்தின் பணிப்பாளர் லோரன்ஸ் ராமநாயக்க உட்பட மேலும் சில கத்தோலிக்க மத குருமார் மற்றும் சட்டத்தரணிகளும் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்றிருந்தனர்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டை செய்ததாக ஜூட் கிறிஸ்சாந்த தெரிவித்துள்ளார்.