14 ஆவது தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு இன்று
தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வுகள் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
பத்தரமுல்லை படைவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக, இன்று பிற்பகல் 4.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
முன்னாள் அதிபர்கள், பிரதமர்கள், சபாநாயகர், இராஜாங்க அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட முப்படைகளின் தளபதிகள், காவல்துறை மா அதிபர் உட்பட பாதுகாப்பு பிரதானிகள், போரில் காயமடைந்த படைவீரர்களின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த படைவீரர் நினைவு தின நிகழ்வில் பங்குபற்றுவதற்காக யுத்தத்தில் காயமடைந்த படைவீரர்கள், வீரமரணம் அடைந்த படை வீரர்களின் உறவினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் பெருமைக்குரிய வகையில் படைவீரர் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு உயிர்த்தியாகம்
செய்த இராணுவம், விமானம்படை, கடற்படை, காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புப்படை வீரர்களின் நித்திய நினைவுகளையும், வீரத்தையும் போற்றும் வகையில் விசேட படைமேள தாளமும், மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்(ஓய்வுபெற்ற) கமல்குணரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
