அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிக் கல்வியில் மாற்றம் : அமைச்சர் அறிவிப்பு
முன்பள்ளிக் கல்வியானது நாட்டின் பரந்த கல்வி முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்
அத்துடன் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் சீரான முன்பள்ளி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பகால சிறுவர் பருவ கல்வி அபிவிருத்தி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்பள்ளி ஆசிரியர் நியமனம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது முன்பள்ளிக் கல்வி முறையானது முறையற்ற ஒரு வடிவத்திலேயே இயங்கி வருகின்றது. இது இன்னும் உத்தியோகபூர்வ அரச சேவையாக அங்கீகரிக்கப்படவில்லை.

முன்பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட நடைமுறைகளோ அல்லது இந்த துறைசார் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான பிரத்யேக அமைச்சோ தற்போது இல்லை.
முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சீர்திருத்தங்கள், நாடு முழுவதும் மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான முன்பள்ளி கல்வி முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த புதிய முன்முயற்சியானது இலங்கையின் ஆரம்பகால சிறுவர் கல்வியை முறைப்படுத்தி, அதனை தேசிய கல்வி நீரோட்டத்துடன் இணைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |