சிறுவர் காப்பகத்தில் 11 சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு - 60 வயதுடைய நபர் கைது!
இரத்தினபுரி, ரக்வானவில் உள்ள சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரக்வான பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 11 சிறுமிகள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் முறைப்பாடு செய்திருந்தது.
இதன்படி, சிறுவர் இல்லத்தின் கண்காணிப்பாளரின் 60 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதி
அதேவேளை, சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் 18 வயதை எட்டியதில் இருந்து வார்டனின் வீட்டில் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கபட்ட குறித்த சிறுமியை கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த சிறுவர் இல்லத்தின் கண்காணிப்பாளரும் நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
