பாடசாலை மாணவர்களுக்கான சீருடையை நன்கொடையாக வழங்கிய நாடு
இலங்கையின் அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான இந்த வருடத்துக்கான பாடசாலை சீருடைகளுக்கான முழு துணித் தேவையும் சீன (China) அரசாங்கத்தின் நன்கொடை மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு (Ministry of education) அறிவித்துள்ளது.
5,171 மில்லியன் ரூபா மதிப்புள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட துணி, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்கொடை நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் இடையே முறையான சான்றிதழ் பரிமாற்ற விழா நேற்று (16) நடைபெற்றது.
பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
அத்துடன், 2026 ஆம் ஆண்டிற்கும் பாடசாலை சீருடைத் துணியை வழங்குவதன் மூலம் சீனா தனது ஆதரவைத் தொடருமாறு அமைச்சு அதிகாரபூர்வமாகக் கோரியுள்ளது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர், "இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இருந்து வருவது ஒத்துழைப்புடன் கூடிய நீண்டகால நட்பாகும். எமது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த சீருடையும் அந்த நீண்டகால நட்பின் ஓர் அங்கமே ஆகும்.
2023 - 2024 ஆண்டுகளிலும் சீன அரசு எமது பாடசாலை சீருடைத் தேவையில் கணிசமான பகுதியைக் கொடுத்ததோடு, 2025 ஆம் ஆண்டின் முழு சீருடைத் தேவையையும் எமது நாட்டின் ஒட்டுமொத்தப் பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
சீன அரசாங்கத்திற்கு நன்றி
இலங்கைக்கு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது, எமது மாணவர் சமுதாயத்தின் கல்வியை முன்னெடுப்பதற்காக சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற அந்த நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்.
2026 ஆம் ஆண்டிற்காகவும் சீன அரசின் இந்த தொடர்ச்சியான உதவியை எமக்குப் பெற்றுத் தருமாறு ஏற்கனவே எமது அரசு சீன அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது.
இத்தருணத்தில் நான் எமது நாட்டின் பிள்ளைகளின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் சீன அரசுக்கும், மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

