பல நாடுகள் தேடிய சீனக் கப்பலை துல்லியமாக கணித்த இந்திய விமானம்!
இந்திய பெருங்கடலில் 39 பேருடன் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் மற்றும் லைஃப் ராஃப்ட் ஆகியவற்றை இந்திய கடற்படையின் P8I விமானம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒரு பாரிய திருப்புமுனையாக, இந்திய கடற்படையினர் மூழ்கிய சீன மீன்பிடி கப்பலான Lu Peng Yuan Yu 28-ஐ கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடலின் நடுவில் மூழ்கிய இந்த கப்பலில் 39 பணியாளர்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கப்பல் கன்னியாகுமரிக்கு தெற்கே தோராயமாக 1660 கிலோமீட்டர் தொலைவில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
துல்லியமாக கணித்த இந்தியா

இந்த நிலையில் இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர், கடற்படையினர் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டன.
அவற்றுடன், இந்திய கடற்படை அதன் மிக சக்திவாய்ந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் வேட்டையாடும் விமானமான Boeing Poseidon (P8I) விமானத்தை தேடுதல் பணியில் ஈடுபடுத்தினர்.
இந்த விமானம் இரவும் பகலும் செயல்படும் திறன் கொண்டது, இதில் அதிநவீன சென்சார்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த விமானத்தை தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் பயன்படுத்த முடியும்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, புலனாய்வு சேகரிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய கடற்படை P8I விமானத்தை பயன்படுத்திவருகிறது.
37 பேரின் நிலை

தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் ராஜாளியிலிருந்து ( INS Rajali in Arakkonam) இயக்கப்படும் பி8ஐ விமானம், கவிழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் பகுதியில் விரிவான சோதனை நடத்தி, சீன மீன்பிடி கப்பலை கண்டுபிடித்தது. கவிழ்ந்த இடத்தை அப்பகுதியில் இயங்கி வரும் சீன கடற்படை போர்க்கப்பல்களுக்கு (People's Liberation Army Navy) இந்திய கடற்படை தெரிவித்தது.
மூழ்கிய கப்பலின் இரண்டு பணியாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மீதமுள்ள 37 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை.
P-8I போர் விமானங்கள்

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு P-8I போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் முதல் P-8I போர் விமானம் கடந்த 2013 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
அதே போல் மீதமுள்ள ஏழு விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கான பயன்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
சுமார் 30 ஆயிரம் மணி நேரத்திற்கு மேலாக அந்தப் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும்.
இந்த போர் விமானங்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்ததை அடுத்து மேலும், கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016 ஆம் ஆண்டில் போயிங் நிறுவனமிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
அந்த ஒப்பந்தம் படி 9-வது P-8I போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது 10-வது P-8I போர் விமானமும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது, 10-வது P-8I போர் விமானமும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான போர் விமானங்கள் கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடா் மீட்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சி அளித்து வருகிறது.
அந்தப் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும் அந்த நிறுவனமே வழங்கி வருகிறது." என்று அதில் குறிப்பிட்டுள்ளது.