வடக்கு - கிழக்கில் கொண்டாடப்பட்ட நத்தார் பண்டிகை...!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழர் பிரதேசங்களில் வழிபாட்டு நிகழ்வுகள் விமர்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், இரவு 12 மணியிலிருந்து வழிபாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, தமிழர் பிரதேசங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலும் வழிபாட்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
🛑 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால் ஒளியேற்றப்பட்டது.


மேலதிக செய்திகள் -Thampithurai Pratheepan
🛑வவுனியா
வவுனியா காவல்துறை தலைமையகத்தினால் நத்தார் குடில் திறந்து வைக்கப்பட்டது.
நத்தார் பண்டிகையை ஒட்டி வவுனியா காவல் தலைமையகத்தில் வவுனியா அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலிமாவினால் நத்தார் பாலகன் குடிலில் வைக்கப்பட்டு நத்தார் ஆராதனைகள் இடம்பெற்று நத்தார் கொண்டாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
வவுனியா சமுதாய காவல்துறையினரின் ஏற்பாட்டில் கிராமிய சமுதாய காவல்துறை அங்கத்தவர்களின் பங்குபற்றுதலோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் உதவி காவல்துறை அத்தியாட்சகர் என்.எம்.திசாநாயக, வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரஜீத் சுரங்க வீரத்தன உட்பட சமுதாய காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு குழு முக்கியஸ்தர்களின் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலதிக செய்திகள் - Kabil
🛑 கிளிநொச்சி
நத்தார் விசேட வழிபாடுகள் கிளிநொச்சியில் பல்வேறு திருச்சபைகளில் சிறப்பாக நடைபெற்றது.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு அருட்பணி ஜோசுவா தலைமையில் நடைபெற்றது.


மேலதிக செய்திகள் - Khandeepan Thangarajah
மூதூர்
மூதூர் -இருதயநாதர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது.
தேவாலயத்தின் அருட்தந்தை அமல்ராஜ் ஆராதனை நிகழ்வை நடாத்தியிருந்தார். இந்த நள்ளிரவு ஆராதனையினையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை நிறைவின்போது மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது. அதேவேளை தேவாலயத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு சோதனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.



செய்தி - புஹாரிஸ்
மன்னார்
மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு புதன் கிழமை (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.



செய்தி - நயன்
செம்பியன் பற்று
வரலாற்று சிறப்புமிக்க செம்பியன் பற்று பங்கின் செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் மானிட மகனான யேசு கிறிஸ்து பிறந்த திருநாள் நேற்றைய தினம் இரவு 11:00 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இரவு 11:40 மணியளவில் கிறிஸ்துமஸ் திரும்பலி ஆனது A.அந்தோனி சாமி பிரான்சிசன் கப்பூச்சியன் சபை தலைமையில் இடம்பெற்றது.
திருப்பலியினை தொடர்ந்து சென் பிலிப் நேரி மறைக்கல்வி மாணவர்களால் கரோல் பாடல் இசைக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் பாப்பா என அழைக்கப்படும் நத்தார் பாப்பாவின் விசேட நடனம் இடம்பெற்றது
கிறிஸ்து பிறப்பு விழாவில் அருட்தந்தை கள் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மற்றும் புனித பிலிப்பு நேரியார் ஆலய கிறிஸ்துமஸ் விழாவுக்கு மருதங்கேணி
பொலிசார் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது


செய்தி - லின்ரன்
மட்டக்களப்பு
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி வழிபாடுகளில் கிறிஸ்தவ மக்கள் ஈடுபட்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் விசேட நத்தார் வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலய பிரதான கிறிஸ்மஸ் ஆராதனை தேவாலய பிரதான போதகர் ரோஷன் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

இயேசுவின் பிறப்பு அவர் இவ்வுலகுக்கு கொண்டு வந்த செய்தி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகளும் இதன்போது இடம்பெற்றது.
செய்தி - ருசாத்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |