தமிழர் பகுதியில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
மட்டக்களப்பு (Batticaloa) - கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளரான செல்வகுமார் வழி மறிக்கப்பட்டு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.
இன்று (14.05.2025) காலை குடும்பிமலைப் பிரதேசத்தில் வைத்து வழி மறித்த நால்வர் அருகில் இருந்த பற்றைக் காட்டிற்குள் அவரை இழுத்துச் சென்று கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் மிக மோசமான முறையில் கையாலும் தடியாலும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்றைய தினம் குடும்பிமலைப் பிரதேசத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு ஏற்பாடாகி இருந்த நிலையில் ஏற்பாட்டாளர்களில் ஒருவருடைய தாயார் காலமானதன் காரணத்தினால் இன்றைய தினம் மேற்படி நிகழ்வினை நடாத்த முடியாமல் போனது.
மோசமாக தாக்கப்பட்டுள்ளார்
இதன் காரணத்தை குடும்பிமலைக் கிராமத்திற்குச் சென்று உரியதரப்பினரிடம் தெரிவித்து விட்டு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
செல்லும் வழியில் தரவை இராணுவ முகாமிற்கும் ஐந்தாம் கட்டை சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கும் இடையில் வழி மறிக்கப்பட்டார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இருந்த நால்வர் அரைகுறைத் தமிழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் தொடர்பான கேள்விகளைக் கேட்டு சட்டைகள் கிழிக்கப்பட்டு துணியினால் கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் அந்த வழியால் வந்த சிலரால் சிவில் சமூக செயற்பாட்டாளர் காப்பாற்றப்பட்டு தற்சமயம் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
