தமக்கேற்ற அரசியலமைப்பினை உருவாக்க இடம்கொடோம் - விஜயதாஸ ராஜபக்ஷ விடாப்படி
சர்வதிகார ஆட்சியில் ஈடுபடுபவர்கள் தமக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பினை உருவாக்கி நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிக்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவரிடம் ஊடகவியலாளர், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வினவிய போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
“புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு படிமுறை ஒன்று உள்ளது. சட்டத்தரணிகள் குழுவோ அல்லது வேறு யாராவதோ தங்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை எழுதிக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை.
புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் தான் சட்டத்தை இயற்றும் செயலைச் செய்துவருகின்றது.
நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு ஒரு அமைப்பு சட்டத்தை எழுதும் நிலை ஏற்படுமாயின் நாடாளுமன்றத்தின் சுயாதீனம் அதளபாதாளத்தை எட்டும்.
கடந்த காலங்களில் கொல்வின் ஆர் டி சில்வா, ஜே.ஆர் ஜெயவர்த்தன போன்றவர்கள் அரசியலமைப்பினை உருவாக்கிய விதம் சகலருக்கும் தெரியும்.
ஆகவே சர்வதிகார ஆட்சியினை மேற்கொண்டுவரும் ராஜபக்ஷாக்கள் தமக்கு ஏற்றவகையில் சட்டத்தை இயற்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்” என்றார்.