அவந்த் கார்ட் நிறுவனத்தின் இரண்டு ரிட் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
அவந்த்-கார்ட் (Avant-Garde Maritime Services) நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்களை முறையான விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.
இந்த மனுக்களின் மூலம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்ட உத்தரவை செல்லாததாக்குமாறு அவந்த்-கார்ட் நிறுவனம் கோரியிருந்தது.
அந்த உத்தரவின் மூலம், இதுவரை நிறுவனம் பராமரித்து வந்த மூன்று ஆயுத களஞ்சியங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கையின் கடல் எல்லை
இவ்வாயுத களஞ்சியங்கள், இலங்கையின் கடல் எல்லையை கடந்து செல்லும் கப்பல்களுக்கு கடல் கொள்ளையர் குழுக்களிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தங்களுக்காக பயன்படுத்தப்பட்டன.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை முதற்கட்டமாக பரிசீலித்த பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளன.
தங்களின் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என்பது மனுதாரர்களின் வாதமாக இருந்தது.
ஆனால், இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போதுமான சட்ட அடிப்படை இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவற்றை நிராகரித்தது.
இதனால், பாதுகாப்பு அமைச்சு வழங்கிய உத்தரவு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
இதன்போது கவனிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
2025 ஒகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் கடல்சார் பாதுகாப்பு சேவைகள் (OBST) முழுமையாக இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
கடற்படைச் சட்டத்தின் 21ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, இச்செயற்பாடுகளை “கடற்படையல்லாத கடமைகள்” என அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சட்டபூர்வமானது என உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம்
பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை இடைநிறுத்த போதுமான சட்ட ஆதாரம் மனுதாரர்கள் முன்வைக்கவில்லை என நீதிமன்றம் கண்டறிந்தது.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் Avant-Garde நிறுவனத்திற்கு இச்செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டதன் மூலம், அவர்கள் மிகப்பெரிய மற்றும் அநியாயமான இலாபம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் இலங்கை கடற்படைக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசின் சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஒக்டோபர் மாதம் முதல் கடற்படை இச்செயற்பாடுகளை நேரடியாக மேற்கொள்ளத் தொடங்கிய பின்னர் கிடைத்த மொத்த வருவாய் அரசின் ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் பின்னர், Avant-Garde நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டியதாக கூறப்படும் ரூ. 782 மில்லியன் நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்ள அரசு சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |