கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் செய்தி பொய்யானது! பிரதம வைத்தியர் வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தடுப்பூசி மையத்திற்கு பொறுப்பான பிரதம வைத்தியர் மகிந்த விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
பொரளை புனித லூக்கா தேவாலயத்தில் நேற்று (12) ஆரம்பமான தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர், எஞ்சியிருக்கும் ஃபைஸர் தடுப்பூசிகளை மூன்று மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் பிரதம வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்
இதேவேளை, பொரளை புனித லூக்கா தேவாலயத்தின் அருட்தந்தை கிருஷாந்த மென்டிஸின் வேண்டுகோளுக்கு இணங்க, காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து தரப்பினருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசியாக ஃபைஸர் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 12 முதல் 20 வயது வரையான அனைவருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
