சதிகாரக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் - சஜித் வெளிப்படை
சதிகார அரசாங்கம்
தற்போதைய அதிபர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தள்ளாடும் பாலம் ஒன்றைக் கடக்க வேண்டியுள்ளதாகக் கூறினாலும், நாட்டிலுள்ள 220 லட்ச மக்களையும் தள்ளாடும் பாலத்தின் கீழே தள்ளிவிட்டுவிட்டு, ராஜபக்சர்களும், அவர்களின் நெருங்கிய நண்பர்களுமே தள்ளாடும் பாலத்தை தற்போது கடந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தற்போதைய அதிபர் ஒரு நகைச்சுவையாளர் என்றும் தற்போதைய அரசாங்கம் சதிகார அரசாங்கம் எனவும் கூறிய எதிர்க்கட்சி தலைவர், மக்களுக்கு எதிராகச் செயற்பட்ட அனைவரும் வரலாற்று நெடுகிழும் மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்கவே நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புத்தல பிரதேசத்தில் இன்று(28) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் புதிய மக்கள் ஆணையொன்று அவசியம். விரைவில் தேர்தலை நடந்துங்கள் என்றும் யானை, காக்கை வேடமிட்டு வந்தாலும் மக்கள் இந்தத் தடவை சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண, குறிப்பிட்ட சட்டகத்திற்கு வெளியே சிந்தித்து, புதிய முறைமைகளுக்கான அணுகலைப் பெற வேண்டும்.
கிரமாங்களுக்கு, நகரங்களுக்கு நாட்டிற்கு எனப் பணியாற்றுவதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தைப் கைப்பற்றும்.
புதிய தொழில்நுட்பங்கள் ஊடாக குறைந்த செலவில் அதிகளவான இலாபத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தைப் போல் அல்லாது மக்களின் நல்வாழ்வுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.