யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் - சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்
யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாளந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம் வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கைது செய்ய நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், "தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை விமர்சிப்பது கிடையாது.

அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.
அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும் ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே அமைகின்றது.
எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |