ஈழ அன்னையர்களின் கண்ணீர் சிறிலங்காவை அமைதியாய் இருக்க விடுமா..!
இப்போதெல்லாம் எங்கள் வீடுகளில் தீபாவளிப் பண்டிகைக்கு யாரும் காத்திருப்பதில்லை. தைப்பொங்கலைக் கொண்டாடவும், சித்திரை வருடப் பிறப்பை கடைப்பிடிக்கக்கவும் கூட நாம் பெரிதாக பார்த்திருப்பதில்லை.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீள்வுக்காகவும் போரில் கொல்லப்பட்டவர்களின் நீதிக்காகவும் நினைவுகொள்ளக் கூடிய நாட்களுக்காக காத்திருக்கிறோம்.
ஓகஸ்ட் 30 அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். ஈழம் கனத்த நெஞ்சுடன் சுமந்திருந்த தினமது. வீடுகள் தோறும் வாசல்கள் உண்டென்பதைப் போல, வீடுகள் தோறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெற்றிடங்களால் ஆனது ஈழ நிலம்.
மகனைத் தேடி உருகும் தாய்
மிக மிக அமைதி நிரம்பிய அந்த வீட்டில் ஒரு பெரிய புகைப்படம் இருந்தது. எப்போதும் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய வகையில், சுவர்கள் இருண்டு கறுத்த அந்த வீட்டில் வெளிச்சம் ஒட்டுவதே இல்லை. ஒளியிழந்த அந்த வீட்டில் இருப்பது ஒரு தாயும் தந்தையும். அவர்களுக்கு இடையில் வரும் கதைகள்கூட அரிதுதான். அப்படி வந்தாலும் அது தம் மகனைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
சில சமயங்களில் ஆளுக்கொரு திசையிலும் சில தருணங்களில் ஒன்றாகவும் போராட்டத்திற்கென பிள்ளையைத் தேடி அவர்களின் கால்கள் நடக்கத் துவங்கும். உண்மையில் அந்தக் காலடிகளில் எழும் ஓசையில் ஒரு பெரும் நெடும் பயணம் அடித்துக் கேட்கும்.
சிரிப்பென்பதை அறியாத அந்த முகங்களில் கால இருள் அப்பி இருந்தது. அழுத்தம் நிறைந்த அந்த விழிகளில் ஒரு தேசத்தின் கதை தெரிந்தது. பிள்ளையைத் தேடித் தேடியே உருகி முடியும் அந்த முதிய தாய், தந்தையர் ஈழ நிலமெங்கும் உருகித் தீரும் பல்லாயிரம் தாய் தந்தையர்களுக்கு உதாரணமானவர்கள். “எங்கள் பிள்ளை வருவான்”, “எங்கள் பிள்ளையை அரசு விடுதலை செய்ய வேண்டும்”. “எங்கள் பிள்ளை வரும் வரை ஓயோம்” என்கிற வெஞ்சினமும் வெந்துயரமும் அவர்களிடம் இருக்கிறதுடி தான். அதைத்தாண்டி அவர்களின் கண்களில் ஒன்றைக் காணமுடிகிறது. அதைத்தாண்டி அவர்களின் முகம் தீர்க்கமாக ஒன்றை தெளிவுரைக்கிறது. அவர்களின் அடங்காத காலடி ஓசையில் இருந்து ஒரு பெரும் செய்தி புறப்படுகிறது.
காணாமல் போனோர் தினமா?
ஓகஸ்ட் 30 அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். இந்த நாளைக் கூட காணாமல் போனார் தினம் என்று தான் நாட்காட்டி நினைவுபடுத்துகிறது. இந்த உலகில் வென்றவர்களாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலும் தான் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எழுதுவிக்கப்படுகிறது. அதெப்படி ஈழத்தில் மனிதர்கள் காணாமல் போக முடியும்? காற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்களா? வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றார்களா? இல்லை திருவிழாவிலே தொலைந்து போனார்களா? ஈழத்தில் மனிதர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். ஈழ நிலத்தில் உரிமைக்கும் விடுதலைக்குமாக ஈழத் தமிழினம் போராடிய வேளையில் ஈழத் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
காணாமல் போனோர் என்று சொல்லுகின்ற போது அதில் அரசுகளுக்கும் அடக்குமுறையாளர்களுக்கும் ஒரு சௌகரியமும் தப்பித்தலும் ஏற்படுகிறது. அவர்கள் காணாமல் ஆக்கிவிட்டு காணாமல் போனோர் என்று சொல்லுவதன் ஊடாக தமது குற்றங்களிலிருந்து நழுவுகிறார்கள். போர் மற்றும் பேரழிப்பு நடந்த ஈழம் போன்ற நாடுகளில் அது சார்ந்த குற்றங்களுக்கு பொறுக்கூறலை செய்ய வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்படுகின்ற நிலையில், காணாமல் போனோர் என்றும் காணாமல் போனோர் அலுலகம் என்றும் அமைத்து போர் மற்றும் இனவழிப்பு சார்ந்த குற்றங்களில் இருந்து தம்மை பாதுகாக்க முற்படுகின்றனர். உண்மையில் அரசாலும் அடக்குமுறையாளர்களாலும் இனவழிப்பு நோக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற கொடூர யதார்த்த நிலையை நாம் உரத்துச் சொல்ல வேண்டும்.
காணாமல் ஆக்கப்படுதல் – திட்டமிட்ட செயல்
அப்படி என்றால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் என்றே நாம் அழைக்க வேண்டும். காணாமல் போனோர் தினம் என்று அழைப்பவர்களுக்கு இடித்துரைக்க வேண்டும். உலக நாடுகளில் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கூட்டமைப்பு இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுத்தது.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் இந்த தினத்தை கடைப்பிடிக்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. உலகம் முழுவதிலும் காணாமல் ஆக்கப்படுதல் என்ற மனித குல விரோதமான செயல் நிகழ்த்தப்படுகிறது. இதனால் உலக அளவில் பல குடும்பங்களும் மனிதர்களும் சிதைவு நிலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ஈழம் போல இன ரீதியான ஒடுக்குமுறைகள், அடங்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்ற நாடுகளில் திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு உபாயமாக காணாமல் ஆக்கப்படுதல் முன்னெடுக்கப்படுகின்றது.
காணமல் ஆக்கப்பட்ட ஐம்பது குழந்தைகள்
ஈழத்தில் 2009இல் நடந்த இறுதிப் போரின் போது போர்க்களத்தில் இருந்து இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்றவர்களில் பலர் இடைநடுவே காணாமல் ஆக்கப்பட்டார்கள். இராணுவத்தின் களத்தில் அவர்களுக்கு இடைநடுவே என்ன நடந்தது என்ற உண்மை இன்னமும் வெளி உலகதிற்கு வெளிச்சப்படுத்தப்படாத நிலை நீடிக்கிறது. அத்துடன் இராணுவத்திடம் சென்று சரணடைந்தவர்கள் பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தாய்மாரும், தந்தையர்களும், மனைவிமாரும் இராணுவத்தின் கைகளில் ஒப்படைத்த பல ஆயிரக்கணக்கானவர்கள், அரசின் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் இன்றுவரையில் விடுவிக்கப்படவில்லை.
குடும்பம், குடும்பமாக பலர் சரணடைந்தார்கள். போராளி, மனைவி, பிள்ளைகள் என குடும்பங்களாக சரணடைந்தவர்களின் நிலை என்ன என்று அறியப்படவில்லை. அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாத மர்மம் நீடிக்கிறது. ஈழ இறுதிப் போர் களத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சுமார் ஐம்பதாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளி விபரங்களையும் சுயாதீன அமைப்புகள் எடுத்துரைக்கின்றன. அத்துடன் இறுதிப் போர்க்களத்தில் சுமார் 50 குழந்தைகள் சரணடைந்திருக்கிறார்கள். அந்த ஐம்பது குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற குரூரமும் வெளித்தெரியாதுள்ளது.
பாலச்சந்திரன் எனும் சாட்சி
உலகில் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுதலில் இலங்கை முன்னணி வகிக்ககூடிய நாடு என்பதற்கு ஈழ இறுதிப் போரில் இல்லாமல் செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் சாட்சியம் ஆகின்றனர். இறுதிப் போரில் சரணடைந்து மார்பில் இரும்புத் துப்பாக்கியை வைத்து பாலகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டான். அப்பாவியாக நிராயுதமாக சரணடைந்த சிறுவன் பாலச்சந்திரனுக்கு நடந்த கொடூரம் வாயிலாக, ஈழ இறுதிக் களத்தில் ஈழக் குழந்தைகள் எதிர்கொண்ட குழந்தைகள்மீதான இனவழிப்புப் பேரவலம் வெளிப்பட்டு நிற்கிறது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் குறித்து உலக அரசியலில் அதிகமும் பேசப்படுகிறது. தாயின் கருவறையில் இருந்து குண்டுகளால் கிழிக்கப்பட்டு கொல்லப்பட்ட குழந்தை முதல் இறந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை துவக்கம், போரின் முடிவில் அப்பாவிகளாய் ஏதும் அறியாமல் சரணடைந்த நிலையில் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியாத எங்கள் ஈழக் குழந்தைகளின் நிலையை பன்னாட்டு சிறுவர் உரிமை அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேடிக்கையும் உலகத் துயரத்தின் முகாந்தரமுமாகும். இலங்கைத் தீவு ஈழக் குழந்தையர்களின் குருதியாலும் ஈழத் தாய்மார்களின் கண்ணீராலும்தான் நனைந்திருக்கிறது.
அறம் கூற்றாகும்
இப் பத்தி ஆரம்பத்தில் நினைவுபடுத்திய ஒரு தாயின் கண்களிலும் முகத்திலும் காலடியிலும் தெரியும், கேட்கும் ஒரு பெரும் செய்தியை சொல்லத் தயாராகிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் (எமனாகும்) என்பது சிலப்பதிகாரம் சொல்லுகிற மிகப் பெரிய தத்துவம். அது இன்று வரை உலகம் முழுவதிலும் நிகழ்ந்தேறி இருக்கிறது.
இலங்கையில் 2009இற்குப் பின்னரும் ஈழ நிலத்தில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி நின்றதையும் கண்கூடாக நாம் கண்டு வந்திருக்கிறோம். அப்படியொரு சூழலில்தான் இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் ஆட்சிக் கதிரையைப் பெற்றிருக்கும் வாய்ப்பும் கிட்டியது.
இந்த நாடு தொடர்ந்தும் பிரளயங்களையும் துன்பங்களையும் அமைதியின்மையையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. பொருளாதார நெருக்கடிச் சுமை மக்களின் உழைப்பை உறிஞ்சுக் கொண்டிருக்கிறது. உழைப்புக்கு குறைந்த ஊதியம், ஊதியத்தை விஞ்சிய செலவு என்று சிறிலங்கா மக்களின் அழுத்தம் குறைந்தபாடில்லை. எப்போதும் தலைக்கு மேல் பொறி உடைந்து விழுமோ என்ற அபாய மனநிலையில் மக்கள் உள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் குருதியால் ஈழத் தீவின் தாயகத்தில் பல்லாயிரம் அன்னையர்கள் இருண்ட கண்களுடன் ஒளியிழந்த முகங்களுடன் காலடி ஓசைகளால் அதிரச் செய்தபடி நடந்து உருகுகையில் இந்தத் தீவு எப்படி அமைதியாயிருக்கும்?
ஈழத் தாய்மார்களின் கண்ணீரைத் துடையுங்கள், அவர்களுக்கு உண்மையையும் நீதியையும் வழங்குகள். அவர்களின் முகங்களில் ஒளி பெருகுகையில் இலங்கைத் தீவு அமைதி பெறும்.