மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்த மலேசிய தமிழர்
இன்று தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழரான தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகிதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தி காத்தையாயும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் எனும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயற்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது.
இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது.
கடந்த 2015ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தி காத்தையாயும் கிறிஸ்டின் ஜெயமணியும் குற்றவாளிகள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், கிறிஸ்டின் ஜெயமணி வெறும் தபால் சேவையைப் போல் செயற்பட்டதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்தார். அவருக்கு பிரம்படி அல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர், தட்சிணாமூர்த்தி காத்தையா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அவருக்கு பலனளிக்கவில்லை. அவர் சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியானது.
கடந்த பிப்ரவரி 12ஆம் திகதி தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட இருந்தார். எனினும், அதை ஒத்திவைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் காரணமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 29ஆம் திகதி அவர் தூக்கிலிடப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தகவல் அனுப்பியது.
சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தட்சிணாமூர்த்தி காத்தையா தாக்கல் செய்துள்ள ஒரு மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவ்வாறு இருக்கையில் அவரை எவ்வாறு தூக்கிலிட முடியும் என்றும் மலேசியாவைச் சேர்ந்த Lawyers for Liberty (LFL) என்ற அமைப்பின் ஆலோசகர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மே 20ஆம் திகதி, அவர் மனு மீதான விசாரணை நிறைவேற உள்ளதாகவும், அவருக்கு சட்ட ரீதியிலான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும் சுரேந்திரன் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த நிலையிலேய தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.