டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் குறித்து சஜித் அதீத கரிசனை
டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சேவையை நிரந்தரப்படுத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விருப்பம் தெரிவித்த போதிலும், அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் பிரதிநிதிகளுடனான நேற்றைய (11) சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் இதேபோன்ற பல அமைச்சரவைப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைவிடப்படும் நிலை

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய பொருளாதார நெருக்கடியில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவது கடினம் என்றாலும், இவர்கள் 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு 22000 ரூபா உதவித்தொகையுடன் பணியமர்த்தப்பட்ட அரச ஊழியர்கள் என்பதனால், 180 நாள் சேவை நாட்களுக்குள் நிரந்தரமாக்கல் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தும் அது அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனால் 1105 அதிகாரிகள் கைவிடப்படும் நிலைக்கு நிலமை மாறியுள்ளது.இந்த அதிகாரிகளின் உரிமைகளுக்காக எதிர்காலத்தில் போராட நாம் தயார்.
தற்போதைய அதிபர் பிரதமராக இருந்த போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்த அதிகாரிகளை, அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக்கிய இத்தரப்புக்கு - நியாயத்தை வழங்க தற்போதைய அதிபராலும், செயலாற்ற முடியாத அரசாங்கத்தாலும் முடியாவிட்டால் கிட்டிய எதிர்காலத்தில் உதயமாகும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் குறித்த நியமனங்களை நிரந்தரமாக்குவதாக” எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.