சிறிலங்காவில் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்ட இந்திய ரூபாய்..!
சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் மத்திய வங்கியினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இலங்கையில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் உத்தியோகபூர்வமாக வங்கிகளில் இந்திய ரூபாவை பயன்படுத்தி தங்களுடைய அந்நியச்செலாவணி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
டொலர், பவுண்ஸ் மற்றும் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு நாணயங்களுக்கான கேள்விகள் அதிகமாக இருப்பதாலும், வங்கிகளில் இந் நாணயங்களின் இருப்புக்கள் இல்லாமையினால் ஏற்றுமதி இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவினுடனான வர்த்தகங்களும் இதனால் பாதிப்படைந்து இருக்கிறது. இதை சீர் செய்யு முகமாக மத்திய வங்கி இந்த நடவடிக்கையை முன்னெடுத்து இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் தரப்பு அடைய போகும் நன்மை
ஆகவே இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், " தமிழர் தரப்பு தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வர்த்தக நடவடிக்கைகளில் சுலபமாக ஈடுபடுவதற்கு இது வழியாக அமைக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நமக்குத் தேவையான மருத்துவ பொருட்களிலிருந்து அத்தியாவசியத் தேவைகள், உணவு, உடை என சகல விடயங்களையும் தருவித்துக் கொள்வதற்கும் ஏற்றுமதி செய்து கொள்வதற்கும் வர்த்தக ரீதியான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது ஒரு வரப்பிரசாதமாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பூகோள ரீதியாக எமக்கு அண்மையில் உள்ள பாரிய சந்தையாக இந்தியா அமைந்துள்ளது. சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இந்த சந்தை வசதியைப் பயன்படுத்துகிறார்கள்.
நாம் இதை முழுதாகத் பயன்படுத்த முயல வேண்டும். வர்த்தக முதலீடுகள் மற்றும் நடவடிக்கைகளை விஸ்தரித்து எமது பொருளாதார நிலையை வளப்படுத்தும் சந்தர்ப்பமாக இதை வர்த்தக, முதலீட்டு, உற்பத்தி, ஏற்றுமதி , இறக்குமதிக்கான பாதையாக எமது சமூகம் கையாள வேண்டும்", என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வேறு நாணயங்கள்
அவுஸ்திரேலிய டொலர், கனேடியன் டொலர், யூரோ உட்பட சில நாணயங்களும் கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


