தெவிநுவர இரட்டை படுகொலை : அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்
தெவிநுவரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (07) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் 26 மற்றும் 35 வயதுடைய கந்தர மற்றும் தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சிங்காசன வீதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு 11:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
வானில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிளை மோதி பின்னர் துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பசிந்து தாரகா (29) மற்றும் யோமேஷ் நடீஷன் என அடையாளம் காணப்பட்ட இருவருக்கும், “பலே மல்லி” என்று அழைக்கப்படும் குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருந்து இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதான சந்தேக நபர்
எனினும், இந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள பிரதான சந்தேக நபர், துபாயில் பதுங்கியிருப்பதாகவும், பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஷெஹான் சத்சர என்றும் அவர் "பலே மல்லி" என்றும் விசாரணைகளில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மாத்தறை பிரிவு குற்றப்பிரிவு, கந்தர காவல்துறையினருடன் இணைந்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அண்மையில் மற்றுமொரு நபர் கைது செய்யபட்டார்.
தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, தெவிநுவரவில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் வானுக்கு தீ வைத்ததில் சந்தேக நபர் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
