யாழ்ப்பாணத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய களியாட்ட நிகழ்வு : விடுதி முகாமைத்துவம் வெளியிட்ட அறிக்கை
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என நிகழ்வு இடம்பெற்ற தனியார் விடுதியின் முகாமைத்துவம் விளக்கமளித்துள்ளது.
இந்த நிகழ்வை ஒழுங்கமைத்த ஒருங்கமைப்பாளர்கள் நிகழ்வை திறம்பட நடாத்தினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில், போதை விருந்து இடம்பெற்றதாகவும் அதில் பங்கேற்றவர்கள் கஞ்சா, மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை பயன்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
நிகழ்வுக்கான அனுமதி
இது தொடர்பாக அந்த தனியார் விடுதி முகாமைத்துவ பணிப்பாளர், ஊடகங்களுக்கு விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு தொடர்பாக சில வாரங்களிற்கு முன்னர் இருவர் தம்மைத் தொடர்பு கொண்டு இடம் கோரியதாகவும், நிகழ்நிலை கட்டண நுழைவுச்சீட்டு நிகழ்வு என்ற காரணத்தால் அதற்கான அனுமதியை யாழ்.மாநகரசபையிடம் பெற்றுவருமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்த அனுமதியை ஏற்பாட்டாளர்கள் பெற்றுக் கொண்டதாக விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்வு நடந்து முடியும் வரை யாழ்.மாநகரசபை பிரதிநிதிகள் நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் விடுதிக்கு வெளியே 06 காவல்துறையினர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 100 முதல் 140 பேர் வரை கொள்ளக்கூடிய மண்டபம் வாடகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், அனுமதிக்கப்பட்ட மதுபானம் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விளக்க அறிக்கை
நிகழ்வு முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றும் நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றனர் என்றும் அந்த தனியார் விடுதி முகாமைத்துவ பணிப்பாளர், ஊடகங்களுக்கு வெளியிட்ட விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை ஒருங்கமைத்த இளம் ஒருங்கமைப்பாளர்கள் நிகழ்வை திறம்பட நடாத்தினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் தான் எமது மண்ணின் எதிர்கால தலைவர்கள் என்றும் அவர்களிற்கு ஒரு வாழ்க்கை முறை உண்டு என்றும் . அவர்கள் மேல் குற்றங்களை சுமத்தாமல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அந்த விளக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்