போதைப் பொருள் பாவிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
போதைப் பொருட்களை பாவிக்கும் பேருந்து சாரதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.
ஐஸ் போதை மாத்திரை மற்றும் ஏனைய போதைப் பொருட்களை பயன்படுத்தியவாறு பொதுப் போக்குவரத்து பேருந்து சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் கைது செய்யப்படுவர் என மோட்டார் போக்குவரத்து காவல்துறை பிரிவு உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் .
விசேட கருவி
மேலும், போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்களை கண்டறிவதற்கு விசேட கருவியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேகத்திற்கு இடமான சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தி 27 பேர் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
செல்வந்த இளைஞர் யுவதிகள்
இந்நிலையில், சில பேருந்து சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் நீண்ட நாட்களாக போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து சாரதிகள் மட்டுமன்றி தலைநகரைச் சேர்ந்த செல்வந்த இளைஞர் யுவதிகளும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, காவல்துறையினருக்கு பேருந்து சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் மட்டுமா கண்களுக்கு தெரிகின்றனர் எனவும் வேறு எவரும் தென்படுவதில்லையா எனவும் கெமுனு விஜேரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.