வெற்றிக்கான உறுதிமொழி - தேர்தலுக்காக உச்சநீதிமன்றம் செல்ல உள்ள சுமந்திரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், “வழக்கில் வெற்றி பெறுவோம்.கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும்.வெற்றியும் பெறும்'' என தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு பகுதியில் விசேட கூட்டம் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேட்பு மனு நிராகரிப்பு
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் கட்சியினுடைய பொதுச் செயலாளர் சக்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுதந்திரன், ''கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக முல்லைதீவு மாவட்ட கிளையினுடைய சிலருடனும் இந்த தொகுதியினுடைய சிலருடனும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களோடும் கட்சியினுடைய பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களும் துணை பொதுச் செயலாளர் ஆகிய நானும் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தோம்.
இறுதி முடிவு
இதிலே நாங்கள் இறுதியாக எடுத்த முடிவு முல்லைத்தீவு தெரிவித்தாட்சி அலுவலர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய வேட்பு மனுவை நிராகரிப்பதாக எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உடனடியாக உச்ச நீதிமன்றத்திலே வழக்கு ஒன்றை எழுத்தாணை கோரி தாக்கல் செய்வோம்.
அதிலே நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலிலே இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும்.''என தெரிவித்தார்