இரு ஆண்டுகளுக்கு பின் அரச குடும்பத்தில் இணைந்த ஹரி தம்பதி - ராணி பங்கேற்காத நிகழ்வில் நேரடி பிரசன்னம்
எலிசபெத் மஹாராணியின் முடிதரிப்பின் 70 ஆம் ஆண்டு விழா
பிரித்தானியாவில் இடம்பெறும் எலிசபெத் மஹாராணியின் முடிதரிப்பின் 70 ஆம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக இன்று இடம்பெற்ற தேவாலய ஆராதனைகளில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகான் ஆகியோர் அரச குடும்பத்துடன் இணைந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் உடல்நிலை காரணமாக எலிசபெத் மஹாராணி கலந்துகொள்ளவில்லை. என்றாலும் அவரது மூத்த புதல்வன் சார்ள்ஸ் ராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
எலிசபெத் மஹாராணியின் முடிதரிப்பின் 70 ஆம் ஆண்டு விழாவின் இரண்டாம் நிகழ்வுகளில் 96 வயதான ராணியின் நேரடிப்பிரசன்னம் இடம்பெறவில்லை.
நேற்று இடம்பெற்ற முதல் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதன் மூலம் ராணி உடல் நிலை அசௌகரியத்தை அனுபவித்ததால் இன்றைய நிகழ்வுகளில் பங்குபற்ற முடியாத கட்டாயம் ஏற்பட்டதாகவும், ஆயினும் தேவாலய நிகழ்வுகளை தனது வின்ட்சர் கோட்டையில் இருந்து அவர் பார்வையிட்டதாகவும் பங்கிங்காம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பங்கேற்பு
இன்றைய தேவாலய நிகழ்வில் பெரும்பாலான அரச குடும்ப உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது மனைவி கேரியுடன் தேவாலயத்துக்கு வந்தபோது கூட்டத்தில் இருந்து சிலர் எதிர்ப்பு ஆரவாரம் செய்ததையும் அவதானிக்க முடிந்தது.
இன்றைய ஆராதனையின் போது புனித விவிலியத்தில் இருந்து ஒரு பகுதியை வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.